“மிஷன் 2024” 3 நாட்களில் 2வது முறை..சோனியாவை சந்தித்த பிரசாந்த் கிஷோர்! பாஜகவை தூக்க பக்கா ப்ளான்
டெல்லி : காங்கிரஸ் கட்சியில் சேரலாம் என்ற கணிப்புகளுக்கு மத்தியில், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை 3 நாட்களில் 2வது முறையாக சந்தித்து பேசினார். 2024ஆம் ஆண்டுக்கு முன்னர் கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல்களுக்கான பிரசாந்த் கிஷோரின் முன்மொழிவை காங்கிரஸ் பரிசீலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியிலும், அடுத்த ஆண்டு கர்நாடகா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு இன்னும் இரு ஆண்டுகள் உள்ள போதிலும் கட்சிகள் அதனை நோக்கியே தங்கள் திட்டத்தை வகுத்து வருகின்றன.

பிரசாந்த் கிஷோர் சந்திப்பு
மூன்றாவது முறையாக ஹாட்ரிக் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற திட்டத்தோடு பாஜகவும் 10 ஆண்டுகளுக்கு பிறகு இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியும் வரிந்து கட்டி தயாராகி வருகின்றன. ஆனால் அதே நேரத்தில் வெற்றிக்கு கூட்டணிக் கட்சிகளின் பங்கு முக்கியம் என்பதால் அது குறித்த வியூகங்களை வகுப்பது பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரசாந்த் கிஷோர் சனிக்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

தேர்தல் திட்டம்
இந்தச் சந்திப்பின்போது கட்சியினை மறுசீரமைப்பு செய்வது, 2024 மற்றும் இடைப்பட்ட காலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொள்வது குறித்த தனது திட்டங்களை எடுத்துரைத்ததாகவும் இது குறித்து ஆராய காங்கிரஸ் ஒரு குழுவினை அமைத்ததாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக சோனியா காந்தியை சந்தித்துப் பேசியுள்ளார் பிரசாந்த் கிஷோர். ஏற்கனவே அவர் ஆலோசகராக இல்லாமல் கட்சியில் சேர காங்கிரஸ் தலைமை விடுத்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, மேற்கு வங்காளத்தில் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, கங்கிரஸ் கட்சியில் சேரும் பிகேவின் திட்டம் தோல்வியடைந்தது.

முக்கிய ஆலோசனை
நேற்றைய கூட்டத்தில், குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியிலும், அடுத்த ஆண்டு கர்நாடகா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் நடைபெறவுள்ள தேர்தல்களைப் பற்றி ஆலோசனைகள் நடத்தப்பட்டது என்றும், இதில் பிரசாந்த் கிஷோர் தனது திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டதாக செய்தி நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் சோனியாவின் மகளும், கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் மூத்த தலைவர்களான முகுல் வாஸ்னிக், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கே.சி. வேணுகோபால், அம்பிகா சோனி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கால அவகாசம்
இந்நிலையில் பிரசாந்த் கிஷோரின் திட்டங்கள் குறித்து காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழு ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த பொதுத் தேர்தலில் கட்சி 370 இடங்களில் போட்டியிடும் திட்டத்தையும், சில மாநிலங்களில் அடிப்படை கொள்கைகளை உடைய கூட்டணிகளை உருவாக்குவதையும் உள்ளடக்கிய கிஷோரின் முன்மொழிவுக்குப் பதிலளிக்க காங்கிரஸுக்கு இம்மாதம் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், பீகார் மற்றும் ஒடிசாவில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என்றும், தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவில் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் திரு கிஷோர் பரிந்துரைத்துள்ளார்.

பிகேவுக்கு எதிர்ப்பு
இதற்கு ராகுல் காந்தி ஒப்புக்கொண்டதாக, பெயர் குறிப்பிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி ANI செய்தி நிறுவனம் முன்பு செய்தி வெளியிட்டுள்ளது. மாநிலத் தேர்தல்களில் சக்தி வாய்ந்த பிராந்தியத் தலைவர்களான மம்தா பானர்ஜி, ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் கே சந்திரசேகர் ராவ் ஆகியோருக்கு அவரது அமைப்பான ஐபிஏசி உதவியதைக் கருத்தில் கொண்டு, கிஷோர் மற்றும் அவரது திட்டங்களுக்கு எதிராக கட்சிக்குள் ஒரு பிரிவினரிடமிருந்து கணிசமான எதிர்ப்பு உள்ளது. மம்தா பானர்ஜி மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி இருவரும் வெற்றி பெற்றதால், வங்காளத்திலும் ஆந்திராவிலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications