எதிர்க்கட்சியினரை பந்தாடும் அமலாக்கத்துறை- இயக்குநர் மிஸ்ராவின் பதவிக் காலம் 3-ம் முறையாக நீட்டிப்பு
டெல்லி: நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்கள் பலரையும் பல்வேறு வழக்குகளில் சிக்க வைத்திருக்கிறது அமலாக்கத்துறை. இந்த அமலாக்கத்துறையின் இயக்குநரான எஸ்கே மிஸ்ராவின் (சஞ்சய் கே மிஸ்ரா) (சஞ்சய் குமார் மிஸ்ரா) பதவிக் காலத்தை மத்திய பாஜக அரசு 3-வது முறையாக நீட்டித்துள்ளது.
மத்திய விசாரணை ஏஜென்சிகளான அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றின் இயக்குநர்கள் பதவிக் காலத்தை 5 ஆண்டுகள் நீட்டிக்கும் சட்ட திருத்தத்தை மத்திய பாஜக அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. ஜனாதிபதியின் ஒப்புதலுடன் இந்த சட்டத் திருத்தம் அமலுக்கும் வந்தது.

டார்கெட் எதிர்க்கட்சி தலைவர்கள்
மத்திய பாஜக அரசின் இந்த சட்ட திருத்தம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. ஏனெனில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பலர் மீதும் அமலாக்கத்துறை ஏராளமான வழக்குகளை பதிவு செய்துள்ளது. பல தலைவர்களையும் சிறையில் அடைத்தும் இருக்கிறது. இதற்காக நீதிமன்றத்திடமும் வாங்கி கட்டியும் இருக்கிறது.

நீளும் வழக்கு பட்டியல்
மேற்கு வங்கத்தின் சாரதா சிட் பண்ட் மோசடி, கர்நாடகா சுரங்க ஊழல், ராஜஸ்தான் ஆம்புலன்ஸ் ஊழல், ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல், ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீதான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு, திமுகவின் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீதான ஸ்பெக்ட்ரம் வழக்கு, மாறன் சகோதரர்கள், ப.சிதம்பரம் மீதான மேக்சிஎஸ் ஐஎன்எக்ஸ் வழக்குகள், அகிலேஷ் யாதவ் மீதான சுரங்க முறைகேடு, மாயாவதி மீதான நினைவகங்கள் ஊழல் வழக்கு, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த்சோரன் மீதான சுரங்க ஊழல் வழக்கு என பெரும் பட்டியலே அமலாக்கத்துறை வசம் இருக்கிறது. இப்படி அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கிவிட்டு தப்பிப்பதற்காக பாஜகவில் சேர்ந்தவர்களும் ஏராளம்.

சஞ்சய் ராவத் கேஸில் டோஸ்
அண்மையில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தை நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த நில மோசடி விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது என கூறியது அமலாக்கத்துறை. 100 நாட்கள் சஞ்சய் ராவத் சிறைவாசத்தை அனுபவித்த நிலையில், சிவில் வழக்கில் எங்கே சட்டவிரோத பண பரிமாற்றத்துகு முகாந்திரம் இருக்கிறது என அமலாக்கத்துறைக்கு குட்டு வைத்தது நீதிமன்றம். பின்னர் சஞ்சய் ராவத்தையும் ஜாமீனில் விடுதலை செய்தது.

எஸ்கே மிஸ்ரா பதவி காலம் நீட்டிப்பு
இத்தகைய சர்ச்சைக்குரிய, நாட்டின் அரசியலையே தீர்மானிக்கக் கூடிய வல்லமைவாய்ந்த அமலாக்கத்துறையின் இயக்குநர் எஸ்கே மிஸ்ரா. 2018-ம் ஆண்டு முதல் இப்பதவியில் சஞ்சய் கே மிஸ்ரா இருந்து வருகிறார். இவரது பதவி காலம் ஏற்கனவே 2 முறை நீட்டிக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டப்படி 3-வது முறையாக எஸ்கே மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு தந்துள்ளது. அவர் மேலும் ஒரு ஆண்டுகாலம் பதவி நீட்டிப்பு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications