இரட்டை இலை சின்னம் முடக்கப்படவில்லை.. உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்.. பரபர விசாரணை
உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனு மீதான விசாரணை பரபரப்பாக நடைபெற்றது. இரட்டை இலை முடக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: அனைத்து சாலைகளும் ரோம் நகரை நோக்கி என்பது போல..அதிமுக தொண்டர்கள் அனைவரின் பார்வையும் உச்சநீதிமன்றத்தை நோக்கி இருந்தது. காரணம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, ஓ.பன்னீர் செல்வம், தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. பரபரப்பான வாதங்களுக்குப் பிறகு தேர்தல் ஆணையம் பழனிச்சாமி வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. இரட்டை இலை முடக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அறிவித்துள்ளது. அதே போல ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் தங்கள் சார்பில் தேர்தல் பணிக்குழுவை அறிவித்துள்ளது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிமுகவின் உட்கட்சி பூசல் பஞ்சாயத்து அடுத்தக்கட்டத்திற்கு சென்றுள்ளது. யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற கேள்வி ஒரு பக்கம் எழும் நிலையில் இரட்டை இலை சின்னமே முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்ட நிலையில், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய வசதியாக, இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கி இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிபதிகளிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முறையிட்டனர்.
இடைதேர்தலில் அதிமுகவின் வேட்புமனுவைத் தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பதால் அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால், இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்தைத் தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
1.32 கோடி இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
ஈபிஎஸ் தரப்பிலான அந்த மனுவில், பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் ஈரோடு இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய ஏதுவாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வேட்புமனு தாக்கலுக்கான இறுதி நாள் உள்ளிட்ட தேதிகளைக் கேட்டறிந்த நீதிபதிகள் வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாளுக்குள் உத்தரவுகள் வரவில்லை என்றால் இடைக்கால நிவாரணம் வழங்குவது தொடர்பாக முடிவு செய்யப்படும் என தெரிவித்தனர்.
இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமையன்று மீண்டும் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர். அதில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்ட வேட்பு மனுவையும், பொதுக்குழு தீர்மானங்களையும் தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இந்த இடையீட்டு மனுவை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனு தொடர்பாக 3 நாட்களுக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கும், ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 3ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நாளைய தினம் வர உள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் இடையீட்டு மனுவிற்கு எதிரான புதிதாக மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனிடையே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் நேற்று மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "அங்கீகரிக்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை சேர்க்க கோருவது ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுக்குழு விவகாரத்தில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இடையீட்டு மனு தாக்கல் செய்வதையும் ஏற்க முடியாது. ஈ.பி.எஸ்ஸின் இடையீட்டு மனு நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்தும் வகையில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பிரதிநிதி என்ற அடிப்படையில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய உரிமை இல்லை. அதனால், எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கோரும் எடப்பாடி பழனிசாமி மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும் என பழனிசாமியின் இடையீட்டு மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதில் மனு அளித்துள்ளது. அந்த பதில் மனுவில், கடந்த ஜுலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போதைய சூழலில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க இயலாது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக பழனிசாமியின் கோரிக்கை குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார்" என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட விதமும் கேள்விக்குரியதாக உள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக வழக்கு இருந்தாலும், இரட்டை இலை சின்னம் குறித்து யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.
இடைத்தேர்தலில் இரட்டை இலை கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டால் தேர்தல் அதிகாரி உரிய முடிவு எடுப்பார். தேர்தல் சின்னம் தொடர்பாக யாரும் எந்த பிரச்சனையையும் கொண்டு வரவில்லை. ஒரு கட்சியின் உட்கட்சித் தேர்தலை கண்காணிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் வேலை இல்லை. அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கட்சிகளும் குறிப்பிட்ட இடைவெளியில் தேர்தல் நடத்தி தெரிவிக்க வேண்டும். ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்காததால் தற்போது வரை அதிமுகவில் இரட்டை தலைமை நீடிக்கிறது என தேர்தல் ஆணையம் தெளிவுபட உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து விட்டது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரைக்கும் வேட்பாளருக்கான அங்கீகரிக்கப்பட்ட படிவத்திலும் இரட்டை இலை சின்னத்துக்கான படிவத்திலும் அதிமுக தலைமை பதவியில் இருப்பவர்களே கையெழுத்திட முடியும். இரட்டை சின்னம் முடங்க நான் காரணமாக இருக்க மாட்டேன் என்றும் கையெழுத்து கேட்டு வந்தால் படிவத்தில் கையெழுத்திட தயார் எனவும் ஓ.பன்னீர் செல்வம் கூறிவருகிறார். அதை ஏற்க எடப்பாடி பழனிசாமி தரப்பு தயாராக இல்லை.
இன்றைய தினம் சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பரபரப்பான வாதங்களை முன்வைத்தது. அதனை ஏற்க தேர்தல் ஆணையம் தரப்பு மறுத்து விட்டது. இரட்டை இலை சின்னம் முடக்கப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை பதில் தருவதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் சேர்ந்து கையெழுத்திட்டால் மட்டுமே ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகிய 2 பேரும் வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் இருவருமே இரட்டை இலை சின்னத்தை கேட்பார்கள். இரு தரப்பும் கோரிக்கை விடுத்தால் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. பொன் விழா கொண்டாடியுள்ள அதிமுகவின் சின்னமான இரட்டை இலை மீண்டும் முடங்குமா? அல்லது கையெழுத்து கேட்டு ஓ.பன்னீர் செல்வத்திடம் செல்வாரா எடப்பாடி பழனிச்சாமி? திங்கட்கிழமையன்று பார்க்கலாம்.