மத்திய அரசு அதிரடி.. பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.10, டீசலுக்கு ரூ.13 கலால் வரி உயர்த்தப்பட்டது
டெல்லி: வருவாய் இழப்பை ஈடுசெய்ய, செவ்வாய்க்கிழமை இரவு முதல், பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ .10 ஆகவும், டீசலுக்கு லிட்டருக்கு 13 ஆகவும் உயர்த்தியுள்ளது மத்திய அரசு. இந்த வரி மாற்றம் மே 6 முதல் நடைமுறைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதே நேரம், இதில் வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி உள்ளது. வரி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விற்பனை விலையை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதுதான் அந்த நல்ல செய்தி. ஏனெனில், விலை உயர்வை, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளும். எரிபொருளின் சில்லறை விலைகளை அதிகரிக்காது.
இந்த வரி ஏற்றத்திலிருந்து கிடைக்கும் வருவாய், உள்கட்டமைப்பு மற்றும் பிற செலவீனங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கூடுதலாக ரூ.14,500 கோடி
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 1 ரூபாய் அதிகரிப்பது என்பது வழக்கமாக அரசிற்கு ஆண்டு வருமானத்தில் கூடுதலாக 14,500 கோடி ரூபாய் ஈட்டித் தரும். ஆனால் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக எரிபொருளுக்கான தேவை கணிசமாக குறைந்துவிட்டது. தேவை உயரும்போதுதான் வருவாய் கிடைக்கும்.
டெல்லி அரசு
கொரோனா வைரஸ் நோயை எதிர்த்துப் போராடுவதற்கான பணிகளுக்கு, பணம் திரட்டுவதற்காக டெல்லி ஆம் ஆத்மி கட்சி அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) அதிகரித்த மறுநாளே, மத்திய அரசு இப்படி வரியை உயர்த்தியுள்ளது. டெல்லி அரசின் வரி கூட்டுதல் முடிவு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ .1.67 அதிகரித்து ரூ .71.26 ஆகவும், டீசல் விலையில் ரூ .7.10 அதிகரித்து ரூ .69.39 ஆகவும் உயர்த்தியுள்ளது.
பாஜக, காங்கிரஸ் எதிர்ப்பு
கெஜ்ரிவால் அரசு முடிவை பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தன. ஆனால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பணம் இல்லாமல் இயங்கும் அரசுகள் உள்ள நமது நாட்டில், பெட்ரோல், டீசல் மற்றும் மதுபான வரியை உயர்த்தி வருவாய் பார்ப்பதுதான், ஒரே வழி என்று கூறுகிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
அனைத்து கட்சி ஆட்சிகளும் அப்படியே
நேற்று மாலை நிலவரப்படி, காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ .2 ஆக உயர்த்த முடிவு செய்தது. மறுபுறம், தெலுங்கானாவின் கே சந்திரசேகர் ராவ் அரசு, மதுபானத்தின் விலையை 16 சதவீதம் உயர்த்துவதற்கான முடிவை அறிவித்தார். இதற்கு சில மணி நேரம் கழித்து, மத்திய நிதி அமைச்சகத்தின், இந்த உத்தரவு வந்தது. ஆக மொத்தம், எந்த ஒரு கட்சியின் ஆட்சியும், இந்த விஷயத்தில் விதிவிலக்கு இல்லை. மார்ச் மாதத்திற்குப் பிறகு இது இரண்டாவது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.