தொடர் அழுத்தம்.. பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கிற்கு தடை விதித்தது பேஸ்புக்.. இனி கணக்கு தொடங்க முடியாது!
டெல்லி: பாஜக எம்எல்ஏ டி ராஜா சிங்கிற்கு தடை விதித்து பேஸ்புக் உத்தரவிட்டுள்ளது. இவரின் பேஸ்புக் கணக்கு நீக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பாஜகவிற்கு ஆதரவாக பேஸ்புக் செயல்படுவதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது. பேஸ்புக்கின் இந்திய தலைமை மற்றும் பல்வேறு அதிகாரிகள் பாஜகவிற்கு ஆதரவாக முடிவுகளை எடுக்கிறார்கள் என்று புகார் உள்ளது.
முக்கியமாக பாஜகவின் தலைவர்கள் செய்யும் வெறுப்பு பேச்சுகளுக்கு எதிராக பேஸ்புக் நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் உள்ளது. அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் எழுதி உள்ள ஆய்வு கட்டுரையில், பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் பாஜகவினர் செய்யும் வெறுப்பு பேச்சுக்களை நீக்குவது இல்லை. பாஜகவினர் செய்யும் போஸ்ட்களை கண்மூடித்தனமாக பேஸ்புக் ஆதரிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
திராவிட அரசியலை முன்னெடுக்கிறதா பாஜக.. என்ன வேணும்னாலும் பண்ணிக்கங்க.. ஜெயிச்சாகணும்.. டெல்லி ஆர்டர்
என்ன கட்டுரை
இந்த கட்டுரைக்கு பிறகே பேஸ்புக் மீது தொடர் புகார்கள் வைக்கப்பட்டது. முக்கியமாக இந்தியாவின் பேஸ்புக் பாலிசி தலைவராக இருக்கும் அங்கி தாஸ் மீது அடுத்தடுத்து புகார்கள் வைக்கப்பட்டது. இவர் மீது போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையிலான பாராளுமன்ற குழு பேஸ்புக்கிற்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு இருந்தது.
2 மணி நேரம்
இந்த விளக்க கூட்ட விசாரணை நேற்று நடந்தது. இரண்டரை மணி நேரம் பேஸ்புக் நிர்வாகிகள் காங்கிரஸ் மற்றும் பாஜக எம்பிக்கள் மூலம் விசாரிக்கப்பட்டனர். அங்கி தாஸ் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டாரா, மோடிக்கு ஆதரவாக போஸ்ட்களை பரப்பினாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதேபோல் பாஜக தரப்பும் பேஸ்புக் நிர்வாகிகள் காங்கிரஸ் தரப்பிற்கு ஆதரவாக இருப்பதாக கேள்விகளை எழுப்பி வந்தது.
என்ன நடவடிக்கை
நேற்று இந்த கூட்டம் நடந்த நிலையில், தற்போது தெலுங்கானாவை சேர்ந்த பாஜக எம்எல்ஏ டி ராஜா சிங்கிற்கு தடை விதித்து பேஸ்புக் உத்தரவிட்டுள்ளது. இவரின் பேஸ்புக் கணக்கு நீக்கப்பட்டுள்ளது. இனி இவர் பேஸ்புக்கில் கணக்கு தொடங்க முடியாது. இன்ஸ்டாகிராமிலும் ராஜா சிங்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜா சிங் வெறுப்பு பேச்சு, வன்முறையை தூண்டும் வகையில் போஸ்ட் செய்ததாக புகார் அளிக்கப்பட்டு வந்தது.
யார் இவர்
இவர் பேஸ்புக் விதிகளை மீறிவிட்டார் என்று கூறி பேஸ்புக் இவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக பாஜக எம்எல்ஏ ராஜா சிங், இந்தியா வரும் ரோஹிங்கியா இஸ்லாமியர்களை சுட்டு வீழ்த்த வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் இவர் மாட்டுக்கறி உண்ணும் இஸ்லாமியர்களை சுட்டு வீழ்த்த வேண்டும் என்றும் என்றும் கூறி உள்ளார். ஆனால் இவருக்கு எதிராக அப்போது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் இப்போது அழுத்தம் காரணமாக இவரின் கணக்கு நீக்கப்பட்டுள்ளது .