3 ஆண்டுகளுக்கு பிறகு.. மக்களிடம் பண புழக்கம்.. களைகட்டிய தீபாவளி.. ஆன்லைனில் 27% அதிகரித்த ஷாப்பிங்
டெல்லி: 3 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளி பண்டிகை களை கட்டி வருகிறது. மேலும் பெஸ்டிவல் சீசன் களை கட்டி வருவதால், இந்திய பொருளாதாரம் ஏற்றம் கண்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பண்டிகை கால கொண்டாட்டங்கள் களையிழந்தன.
தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதே இதற்கு காரணம். சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் ஒருபக்கம் பொதுமுடக்கம் காரணமாக ஏற்பட்ட வருவாய் இழப்பு ஒரு பக்கம் என பண்டிகை கால கொண்டாட்டங்களில் தாக்கம் ஏற்பட்டது.

கடை வீதிகளில் கூட்டம்
தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்துவிட்டதால் கட்டுப்பாடுகள் முழுவதுமாக தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு முழு உற்சாகத்துடன் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால், தீபாவளியை முன்னிட்டு மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி குவிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். கடை வீதிகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதுகிறது.

27 சதவீதம் அதிகரிப்பு
ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களிலும் விற்பனை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 27 சதவீதம் அதிகரித்து இருப்பதாக அமேசான் மற்றும் பிலிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தீபாவளி பண்டிகைக்கு நுகர்வோர்கள் வாங்கும் சதவிகிதம் பன்மடங்கு அதிகரித்து இருப்பது இந்தியா பொருளாதாரத்தையும் ஏற்றம் காண செய்வதாக அமைந்துள்ளது.

விற்பனை அதிகரிப்பு
நவராத்ரி மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில் புதிய வாகனங்களின் விற்பனை 57 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக இந்திய ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல், ஊரக பகுதிகளில் இருசக்கர வாகனங்களை வாங்குவோர் எண்ணிக்கையும் 2019- ஆம் ஆண்டின் அளவோடு ஒப்பிடுகையில் 3.7 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதேபோல், கார்கள் மற்றும் எஸ்.யூ.வி ரக வாகன விற்பனை எண்ணிக்கையும் கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது 92 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

வேலையின்மை விகிதமும் குறைந்துள்ளது
தேவை அதிகரிப்பால் தொழில்துறையும் தங்கள் திறனை அதிகரித்துள்ளன. பருவமழை நன்றாக பெய்தது, கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு ஆகியவற்றால் விவசாயத்துறை மற்றும் சேவைத்துறைகளில் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவித்துள்ளது. அதேபோல், வேலையின்மை விகிதமும் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு செப்டம்பரில் குறைந்துள்ளது.

மூன்று ஆண்டுகளில் முதன்முறையாக
பொருளாதாரம் மீட்சி அடைந்து வருமானத்தை இயல்பான அளவுக்கு கொண்டு வந்திருப்பதால், இந்திய நுகர்வோர்களின் செலவினங்களும் அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கியின் ஆய்வு கூறியுள்ளது. மூன்று ஆண்டுகளில் முதன்முறையாக பண்டிகை காலங்களில் தேவை அதிகரித்து இருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே சரக்கு மற்றும் சேவைத்துறையில் மக்கள் செலவு செய்வது அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications