அமளி, ஆவேசங்களிடையே.. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் 2 அவைகளிலும் 5 மசோதாக்கள் நிறைவேற்றம்
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இரு சபைகளிலும் மொத்தம் 5 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ந் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் இன்று மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தொடரில் 22 நாட்களில் 16 அமர்வுகள் நடைபெற்றுள்ளன.
இந்தக் கூட்டத்தொடரை ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 12 வரை 18 அமர்வுகளாக நடத்துவது என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், முக்கியமான அரசு அலுவல்கள் முடிவடைந்துவிட்டதாலும், நாடாளுமன்றத்திற்கு வரவிருக்கும் விடுமுறைகளை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதாலும் முன்கூட்டியே முடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரின் போது மக்களவையில் ஆறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மக்களவையில் ஏழு மசோதாக்களும், மாநிலங்களவையில் ஐந்து மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. மக்களவையின் அனுமதியோடு தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2019 திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து இந்தக் கூட்டத்தொடரின் போது இரு அவைகளிலும் மொத்தம் ஐந்து மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
குடும்ப நீதிமன்றங்கள் (திருத்த) மசோதா, 2022
பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விநியோக முறைகள் (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு) திருத்த மசோதா 2022
இந்திய அண்டார்டிகா மசோதா 2022
தேசிய ஊக்கமருந்து தடுப்பு மசோதா 2021
மத்திய பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா 2022
ஆகியவை இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட முக்கியமான மசோதாக்களாகும்.
விலைவாசி உயர்வு குறித்து அவை விதி 193-ன்கீழ், மக்களவையிலும், இதே விஷயம் குறித்து அவை விதி 176-ன்கீழ், மாநிலங்களவையிலும் குறுகிய கால விவாதங்கள் நடைபெற்றன.
இந்தியாவில் விளையாட்டுக்களை மேம்படுத்துவதன் தேவை, அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து திரு கௌரவ் கோகோய் எழுப்பிய விஷயத்தின் மீதான விவாதம் மக்களவையில் மார்ச் 31 அன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்தக் கூட்டத்தொடரிலும் அது எடுத்துக்கொள்ளப்பட்ட போதும், நிறைவடையவில்லை. மக்களவையின் செயல்பாட்டு திறன் சுமார் 48 சதவீதமாகவும், மாநிலங்களவையில் செயல்பாட்டு திறன் 44 சதவீதமாகவும் இருந்தது.












Click it and Unblock the Notifications