இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஏன் சமஸ்கிருதம் இருக்கக்கூடாது? முன்னாள் தலைமை நீதிபதி பேச்சு!
இந்தியாவில் உள்ள பிராந்திய மொழிகளில் சமஸ்கிருதம் கலந்திருக்கிறது. கன்னட மொழியில் 60-70% வரை சமஸ்கிருதம் கலந்திருப்பதாக மொழியியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
டெல்லி: இந்தியாவின் அலுவல்/அதிகாரப்பூர்வ(official language) மொழியாக ஏன் சமஸ்கிருதம் இருக்கக்கூடாது? என்று உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி போப்டே கேள்வியெழுப்பியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு என இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகியவை அலுவல் மொழியாக இருந்தாலும் கூட இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேசிய மொழி என எதுவும் கிடையாது. வட மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சிகள் இந்தியை அதிகாரப்பூர்வ மொழியாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. அதேபோல, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சமஸ்கிருதத்தை அதிகாரப்பூர்வ மொழியாக மாற்ற வேண்டும் என்று முயன்று வருகிறது.
இந்நிலையில், போப்டே பேசியிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 'சமஸ்கிருத பாரதியால்' ஏற்பாடு செய்யப்பட்ட அகில் பாரதிய சத்ர சம்மேளனத்தில் பங்கேற்று பேசியிருந்த போப்டே இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, "உயர்நீதிமன்றங்களில் அதிகாரப்பூர்வ மொழி என்பது ஆங்கிலம்தான். ஆனால் பல உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளில் விண்ணப்பங்கள், மனுக்கள் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்.

மொழி பிரச்னை
நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி பிரச்னையானது 1949ம் ஆண்டிலிருந்து இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கிறது. இதன் காரணமாக தவறான தகவல் தொடர்புகள் ஏற்படலாம். இது ஆபத்தை உருவாக்கும். ஆனால் இது குறித்து விவாதிக்க வேண்டிய இடம் இதுவல்ல. நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாக சமஸ்கிருதத்தை டாக்டர் அம்பேத்கர் முன்மொழிந்தார் என்று 1949ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி நாளிதழ்கள் தெரிவிக்கின்றன. சமஸ்கிருத சொற்களஞ்சியம் நம்முடைய பல மொழிகளில் பொதுவானதாக இருக்கிறது. இந்நிலையில் அம்பேத்கர் முன்மொழிந்த சமஸ்கிருதம் ஏன் அலுவல் மொழியாக இருக்க கூடாது? என்கிற கேள்வியை எனக்கு நானே கேட்டுக்கொள்கிறேன்.

சமஸ்கிருதம்
சமஸ்கிருதத்தை அறிமுகப்படுத்துவது எந்த மதத்தையும் அறிமுகப்படுத்துவதாக இருக்காது. சமஸ்கிருதத்திற்கும் மதங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆனால் தத்துவம், சட்டம், அறிவியல், இலக்கியம், கட்டிடக்கலை, வானியல் போன்றவற்றுடன் இது தொடர்புடையாக இருக்கிறது. சமஸ்கிருதம் தென்னிந்திய அல்லது வடகிழக்கு இந்தியாவை சேர்ந்தது அல்ல. இந்த மொழி மதச்சார்பற்ற தன்மைக்கு மிகவும் பொருத்தமானது. அதேபோல கணினிகளுக்கும் பொருத்தமானது என நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சமஸ்கிருதம் குறைந்த வார்த்தைகள் மூலம் அதிக செய்திகளை கடத்த பயன்படுத்தலாம்.

இந்தியா
இந்தியாவை பொறுத்த அளவில் 43.63% பேர் இந்தி பேசுகிறார்கள். 6% பேர் மட்டுமே ஆங்கிலம் பேசுகிறார்கள் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இந்த 6 சதவிகிதமும் கிராமபுறத்தில் 3 சதவிகிதமாக சுருங்கி விடுகிறது. பணக்காரர்களில் 41% ஆங்கிலத்தை பேசுகிறார்கள். ஏழைகளில் வெறும் 2% சதவிகிதம் பேர் மட்டுமே ஆங்கிலம் பேசுகிறார்கள். ஆனால் சம்ஸ்கிருதம் பிராந்திய மொழிகளுடன் இணைந்து இருக்கிறது. நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளுடன் இணைந்திருக்கும் ஒரே மொழி சமஸ்கிருதம் மட்டும்தான். இந்தியர்கள் தங்கள் பிராந்திய மொழிகளில் ஒருவரையொருவர் தொடர்புகொள்ளும்போது அதில் பல சமஸ்கிருத வார்த்தைகள் இருக்கிறது.

பிராந்திய மொழி
இதனை மொழி வல்லுநர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். எனவே நான் இவர்களிடம் கலந்தாலோசனை செய்த பின்னர்தான் இதுகுறித்து பேசுகிறேன். உருது மொழியை எடுத்துக்கொண்டால் கூட அதில் சமஸ்கிருதத்தின் மூல வார்த்தைகள் இருக்கின்றன. அதேபோல அசாமி, இந்தி, தெலுங்கு, பெங்காலி போன்றவற்றிலும் சமஸ்கிருதம் இருக்கிறது. இதே கன்னட மொழியில் மட்டும் சுமார் 60-70% சம்ஸ்கிருதம் இருக்கிறது. ஆனால் அலுவல் மொழியாக சமஸ்கிருதத்தை மாற்றினால் கூட அதனை சாத்தியப்படுத்த சில ஆண்டுகள் ஆகும். இந்த உண்மையை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் இந்த மொழியை எந்த மதசார்பற்றும் கற்பிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications