சீனா என்ற பெயரை உச்சரிக்கவே ஏன் மத்திய பாஜக அரசுக்கு இவ்வளவு அச்சம்? ப.சிதம்பரம் சுளீர் கேள்வி
டெல்லி: நாட்டின் எல்லைகளில் தொடர்ந்து ஊடுருவும் சீனாவின் முயற்சிகளை தடுக்க மத்திய அரசு என்ன முயற்சிகளை மேற்கொண்டது? சீனாவின் ஊடுருவல் தொடர்பாக அந்நாட்டு அதிபர் ஜின் பிங்குடன் பிரதமர் மோடி பேசியது என்ன? நாட்டின் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தாது ஏன்? என மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ப.சிதம்பரம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தில் சீனா ஊடுருவல், நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிக்கை உள்ளிட்டவை தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு ப.சிதம்பரம் அளித்த பேட்டியில் இடம்பெற்றுள்ளதாவது:

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் எதுவும் இல்லை. வெற்று அறிக்கை. ராஜ்நாத் சிங் அறிக்கையில் நாளிதழ்களில் வந்ததது தவிர கூடுதலான விவரங்கள் என்ன இருந்தது? எம்.பி.க்கள் தெரிவித்த தகவல்கள் கூட அதில் இடம்பெறவில்லையே.
அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா ஊடுருவ திட்டமிட்டதன் பின்னனி குறித்து பாதுகாப்பு அமைச்சரிடம் நான் கேட்டிருப்பேன். அது எப்படி இந்த தேதியில் இந்த இடத்தில் இன்ன நேரத்தில் ஊடுருவுவது என சீனா திட்டமிடுகிறது என்பது தெரிய வேண்டும். 2020-ம் ஆண்டு கல்வானிலும் இப்படியான ஊடுருவல் நடந்தது. இப்போது மீண்டும் நிகழ்ந்துள்ளது. இத்தகைய ஊடுருவல்களை சீனா மேற்கொள்ளாமல் தடுக்க என்ன செய்தீர்கள் என்பதுதான் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் நான் கேட்க விரும்பும் கேள்வி.
சீனாவின் இத்தகைய ஊடுருவல்களைப் பற்றி பேசவே மத்திய பாஜக அரசு அச்சப்படுகிறது. அந்த அளவுக்கு இது தீவிரமான விவகாரம். பொதுவாகவே சீனா என உச்சரிக்கவே மத்திய பாஜக அரசு அச்சப்படுகிறது. பிரதமர் உள்ளிட்டோர் அச்சப்படுகின்றனர். சீனா என்ற வார்த்தையை பிரதமர் மோடி குறிப்பிடுவதும் இல்லை. சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்த போது நடந்தது என்ன என்பது பற்றியும் பிரதமர் மோடி விளக்கம் தரவே இல்லை. இத்தனைக்கும் சீன அதிபர் ஜின் பிங்கை பலமுறை பிரதமர் மோடி சந்திக்கிறார். ஜி20 மாநாட்டில் கூட பிரதாம்ர் மோடி சந்தித்தார். ஒரே அறையில்தான் இருவருமே இருந்தனர். சீனாவின் இத்தகைய ஊடுருவல்கள் தொடர்பாக ஜின்பிங்கிடம் மோடி எதுவும் சொன்னாரா? இல்லை எதுவும் சொல்லவே இல்லையா? என்பதே நமது கேள்வி.
நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கை மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என கோரி இருந்தோம். ஆனால் அந்த கோரிக்கையை ஏற்காதது தவறு. கடந்த காலங்களில் அமைச்சர்கள் விளக்கம் அல்லது அறிக்கை தாக்கல் செய்த பின்னர் விவாதம் நடந்த முன் உதாரணங்கள் இருக்கின்றன. பிரதமராக நரசிம்ம ராவ் பதவி வகித்த போது, ஓட்டுக்கு பணம் தருவது தொடர்பாக விவாதம் நடந்தது. அன்னா ஹசாரே இயக்கம் நடந்த போது ராஜ்யசபாவில் 7 மணிநேரம் விவாதம் நடைபெற்றது. அதில் 27 எம்.பிக்கள் பங்கேற்றனர். அப்போது அமைச்சரின் அறிக்கைக்குப் பின்னர் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவாதம் நடைபெற்றது. ஆகையால் அமைச்சரின் அறிக்கைக்குப் பின்னரும் விவாதம் நடத்தலாம் என்பதற்கு உதாரணங்கள் உண்டு.
நாட்டின் எல்லைப் பிரச்சனை.. ரொம்பவும் உணர்வுப்பூர்வமானது என மத்திய அரசு கருதினால் நாடாளுமன்றத்தின் கதவுகலை மூடிவிட்டு விவாதம் நடத்துங்கள். அதை எதிர்க்கவில்லையே. ஆனால் நீங்கள் விவாதமே நடத்த விரும்பவில்லை. நாட்டின் எதிர்க்கட்சிகள் மீது மத்திய அரசுக்கு நம்பிக்கை இல்லை. குறைந்தபட்சம் எதிர்க்கட்சிகளின் தலைவர்களை அழைத்து இது தொடர்பாக விவாதித்திருக்க வேண்டும் மத்திய அரசு. இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.












Click it and Unblock the Notifications