இந்தியாவில் மேலும் 4 பேருக்கு பிஎப் 7 வகை கொரோனா.. அமெரிக்காவில் இருந்து மே.வங்காளம் வந்தவர்கள்
டெல்லி: அமெரிக்காவில் இருந்து மேற்கு வங்காளம் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேருக்கு ஒமிக்ரான் பிஎப் 7 வகை கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிவேக பரவலுக்கு இந்த கொரோனா வழிவகுக்கும் என்பதால் அவர்கள் 4 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் கொரோனா அதிவேகமாக பரவி வருவதற்கு காரணமாக அமைந்த பிஎப் 7 வகை கொரோனா இந்தியாவிலும் 3 பேருக்கு பரவியிருந்தது. குஜராத்தை சேர்ந்த ஒருவருக்கும் ஒடிசாவை சேர்ந்த இரண்டு பேருக்கும் இந்த கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
ஒமிக்ரானின் புதிய வகை வேரியண்ட் ஆன பிஎப் 7 கொரோனா ஒருவரிடம் இருந்து 18 பேர் வரை பரவும் தன்மை கொண்டது.
'முழு பூசணிக்காய்' கொரோனா பாதிப்பை மறைக்கும் சீனா..போட்டு உடைத்த WHO..என்ன சொல்லி இருக்கு தெரியுமா?
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
அதிவேக பரவலுக்கு இந்த கொரோனா வழிவகுக்கும் என்பதால் உலக நாடுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீண்டும் கொண்டு வரத்தொடங்கின. இந்தியாவிலும் புதிய வகை கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சீனா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வழங்குவது கட்டாயம் என்று தெரிவித்தது.
4 பேருக்கு பிஎப் 7 வகை கொரோனா
இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா வந்த 4 பேருக்கு பிஎப் 7 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் அமெரிக்காவில் இருந்து நான்கு பேரின் கொரோனா மாதிரிகளை மரபணு பகுப்பாய்வு சோதனை செய்ததில் அவர்களுக்கு பிஎப் 7 வகை கொரோனா பாதித்து இருந்தது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மேற்கு வங்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதித்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
தொடர் கண்காணிப்பில்..
ஒமிக்ரானின் புதிய வேரியண்ட் ஆன பிஎப் 7 வகை கொரோனா பாதித்த நான்கு பேரின் உடல் நிலையும் சீராக இருப்பதாகவும் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் சுகாதாரத்தூறை அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய வகை கொரோனா பாதித்த 4 பேரில் மூன்று பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மேற்கு வங்க மாநிலத்தின் நடியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். ஒருவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். எனினும் தற்போது கொல்கத்தாவில் வசித்து வருகிறார்.
மரபணு பகுப்பாய்வு சோதனை
புதிய வகை தொற்று பாதித்த 4 பேருடன் தொடர்பில் இருந்த 33 பேர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்களின் உடல் நிலையும் கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதும் கொல்கத்தா விமான நிலையத்தில் சர்வதேச பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு சோதனைக்கும் உட்படுத்தப்பட்டு வருகிறது.
40 நாட்கள் மிக முக்கியமானவை
கடந்த வாரம் கொல்கத்தா விமான நிலையம் வந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனினும் அவர்களின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு சோதனைக்கு உட்படுத்தியதில் அவர்களுக்கு பிஎப் 7 வகை கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருந்தது. இதற்கிடையே, இந்தியாவில் அடுத்த 40 நாட்கள் மிக முக்கியமானவை என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நடப்பு ஜனவரி மாதத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம் என்றும் சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இல்லை
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்தாலும் பாதிப்பின் தீவிரம் குறைவாகவே இருக்கும் என்றும் உயிரிழப்புகளும் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் எனவும் ஆறுதல் அளிக்கும் வகையிலான தகவலையும் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்.டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து தமிழகம் திரும்பியவர்களுக்கு கூட கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. எனினும், தமிழகத்தில் இதுவரை யாருக்கும் பிஎப் 7 வகை கொரோனா பாதிப்பு இல்லை என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.