தேர்தலில் இலவசங்களை எதிர்க்கும் வழக்கு.. களமிறங்கிய திமுக.. உச்சநீதிமன்றத்தில் ஆர்எஸ் பாரதி மனு
டெல்லி: தேர்தலில் இலவசங்கள் வழங்குவதை எதிர்த்து பாஜகவின் அஸ்வினி உபாத்யாய் தொடர்ந்த வழக்கில் தங்களையும் எதிர்தரப்பில் இணைக்க வேண்டும் எனக்கூறி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மனுவில் முக்கிய விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தலில் இலவசம் வழங்குவதை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். பல்வேறு பொதுமேடைகளில் பாஜக தலைவர்கள் இதுபற்றி பேசி வருகின்றனர்.
இதற்கு திமுக, ஆம்ஆத்மி கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. இந்நிலையில் தான் பாஜக கட்சியை சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் சார்பில் டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வாக்குகளுக்காக இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள்.. நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்து.. பிரதமர் மோடி பேச்சு!
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இந்த வழக்கின் மனுவில், ‛‛தேர்தல் சமயத்தில் இலவசங்களை அறிவிக்க தடை விதிக்க வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது. மேலும் இலவசங்கள் அறிவிப்பு தொடர்பாக ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும் தேர்தலில் வாக்களிக்கும் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பது என்பது லஞ்சம் போன்றதாக உள்ளது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
மிகவும் முக்கிய பிரச்சனை
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்வி ரமணா அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இதில் அப்போது ‛‛பொருளாதார இழப்பு, மக்கள் நலன் இரண்டுக்கும் சமநிலையில் இருக்க வேண்டும்'' எனக்கூறிய உச்சநீதிமன்றம் ஒவ்வொருவரின் கருத்து, பார்வை குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு, தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிக்கு உத்தரவு பிறப்பித்தது.
மேலும் ‛‛இது மிகவும் முக்கியமான பிரச்சனை. நாட்டின் பொருளாதாரத்துடன் தொடர்புடையது'' என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து இருந்தது.
அஸ்வினி உபாத்யாய் தரப்பு வாதம்
மேலும் அஸ்வினி உபாத்யாய் சார்பில் வாதிடப்பட்டது. அப்போது, ‛‛தேர்தல் வெற்றிக்காக மக்களின் வரிப்பணத்தில் இருந்து இலவசப் பொருட்களை வழங்குவதாக அரசியல் கட்சிகள் அறிவிக்கின்றன. இதன் சுமை மக்கள் மீது தான் திணிக்கப்படுகிறது. மேலும் இந்த அறிவிப்புகள் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கிறது. இதனால் இலவச அறிவிப்புகள் வெளியிடும் முன், அதனால் ஏற்படக் கூடிய பொருளாதார தாக்கம் குறித்து ஆய்வு செய்வதை கட்டாயமாக்க வேண்டும்'' என வாதிட்டார்.
உச்சநீதிமன்றம் கருத்து
இந்த வழக்கில் இன்னொரு தரப்பில் ஆம் ஆத்மி கட்சி தரப்பில் வாதிடப்பட்டது . ‛‛இலவசத் திட்டங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன'' என கூறப்பட்டது. இதையடுத்து வாதங்களை கேட்ட நீதிமன்றம் ‛‛இந்தியா போன்ற நாட்டில் இலவசங்களை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது. இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது ஜனநாயக விரோத செயல் என்பதால் அதனை பரிசீலிக்க மாட்டோம்'' என கூறியது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Recommended Video
திமுக சார்பில் மனு
மேலும் இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்ட இலவச திட்டங்களும் விவாதமாக வைக்கப்பட்டது. இந்நிலையில் தான் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுகவின் ஆர்எஸ் பாரதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தேர்தலில் இலவச திட்டங்கள் எதிர்க்கும் வழக்கில் தங்களையும் இணைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேவை வெவ்வேறாக உள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் ஒரேமாதிரியான திட்டம் என்பது நிச்சயம் பொருந்தாது. இதனால் மாநிலங்களுக்கு ஏற்பட மாநில அரசுகள் திட்டங்களை அறிவிக்கும் எனும் வகையில் மனுவில் கூறப்பட்டுள்ளது.