டெல்லி, உபியை அலறவிட்ட பயங்கர ரவுடி.. போலீஸ் போட்ட சினிமா பாணி 'ஸ்கெட்ச்'.. ஷாக் என்கவுண்டர்
டெல்லி: டெல்லி, உத்தரபிரதேசம் சுற்றுப்பகுதிகளில் பயங்கர ரவுடியாக வலம் வந்த நபரை போலீஸார் நேற்று நள்ளிரவு என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக போலீஸாருக்கு சிம்மசொப்பனமாக இருந்து வந்த அந்த ரவுடியை, சினிமா பாணியில் ஸ்கெட்ச் போட்டு போலீஸார் தூக்கியுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த என்கவுன்ட்டர் சம்பவத்தை அடுத்து, அவனது சொந்த மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பயங்கர ரவுடி
உத்தரபிரதேச மாநிலம் பாஹ்பட் பகுதியைச் சேர்ந்தவர் கபில் (45). பயங்கர ரவுடி. டெல்லியிலும், உத்தரபிரதேசத்திலும் இவனது பெயரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆரம்பத்தில், பல தாதாக்களின் அடியாளாக வேலை செய்து வந்த கபில், ஒருகட்டத்தில் அவர்களையே கொலை செய்துவிட்டு பெரிய ரவுடியாக உருவெடுத்தான். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோரை இவன் கொலை செய்ததாக கூறப்படுகிறது. கொலை, ஆள்கடத்ததல், கட்டப்பஞ்சாயத்து என கபில் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

போலீஸாருக்கு சிம்ம சொப்பனம்
இத்தனை வழக்குகள் இருந்தபோதிலும், போலீஸாரால் கபிலை நெருங்க முடியவில்லை. அந்த அளவுக்கு ஆள் பலமும், அரசியல் செல்வாக்கும் அவனுக்கு இருந்தது. மேலும், கபிலுக்கு எதிராக யாரும் துணிந்து சாட்சி சொல்ல வராததால் சட்ட ரீதியாகவும் அவன் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீஸார் திணறி வந்தனர். இவ்வாறு கடந்த 10 ஆண்டுகளாக போலீஸாருக்கு சிம்ம சொப்பனமாக கபில் இருந்து வந்தான். அவனை பற்றி துப்புக்கொடுக்க ரூ.1 லட்சம் சன்மானமும் போலீஸார் அறிவித்திருந்தனர்.

சினிமா பாணி ஸ்கெட்ச்
இதனிடையே, கடந்த ஓராண்டாக கபில் மற்றும் அவனது கூட்டாளிகளின் அராஜகம் அத்துமீறி சென்றது. பட்டப்பகலில் கொலை செய்வது, போலீஸார் மீது தாக்குதல் நடத்துவது என அவர்களின் அட்டூழியங்கள் அதிகரித்து வந்தன. இதையடுத்து, அவனை கைது செய்ய உபி போலீஸார் முடிவு செய்தனர். இதன்பேரில், போலீஸாரே ஒரு நாடகத்தை நடத்தனர். அதாவது, கபிலுக்கு பரமவிரோதியான மற்றொரு ரவுடி நொய்டாவில் ஒரு இடத்தில் தங்கியிருப்பதாக, அவனுக்கு நெருக்கமான நபர் மூலமாக போலீஸார் தெரிவிக்கச் செய்தனர். இதனை நம்பிய கபில், நேற்று நள்ளிரவு தனது ஆட்களுடன் நொய்டாவில் உள்ள பிஸ்ராக் பகுதிக்கு வந்துள்ளான்.

அதிரடி என்கவுன்ட்டர்
கபில் பயங்கர ரவுடி என்பதால் அவனை சுற்றி வளைக்க டெல்லி போலீஸாரின் உதவியை உபி போலீஸார் நாடினர். இதன்பேரில், இரு மாநில போலீஸார் இணைந்த தனிப்படை, இதற்காக உருவாக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று தனது ஜீப்பில் வந்த கபிலையும் அவனது ஆட்களையும் போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீஸார் மீது கபிலும், அவனது ஆட்களும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு, போலீஸார் சுட்டதில் ரவுடி கபில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அவனது அடியாட்கள் தப்பியோடினர். இச்சம்பவத்தை அடுத்து உபியிலும், டெல்லியிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications