இது தேர்தல் விருது.. பத்மஸ்ரீ விருதை நிராகரித்தார் எழுத்தாளர் கீதா மேத்தா
டெல்லி: தேர்தல் நேரத்தில் பத்மஸ்ரீ விருது கொடுத்திருப்பதை ஏற்க முடியாது. ஏனவே விருதை ஏற்க இயலாது என்று பிரபல எழுத்தாளர் கீதா மேத்தா கூறியுள்ளார்.
இவர் மறைந்த ஒடிஷா முதல்வர் பிஜூ பட்நாயக்கின் மகள், தற்போதைய முதல்வர் நவீன் பட்நாயக்கின் சகோதரி ஆவார். நேற்று பத்ம விருதுகள் 2019 அறிவிக்கப்பட்டன. அதில் கீதா மேத்தாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் விருதை ஏற்க முடியாது என்று மறுத்துள்ளார் கீதா மேத்தா. இதுகுறித்து அவர் கூறுகையில், பத்மஸ்ரீ விருதுக்கு நான் தகுதியானவள் என்று அரசு முடிவு செய்திருப்பது எனக்கு கெளரவம் தருகிறது. அதேசமயம், இதை நான் ஏற்கக் கூடாது என்று எனது மனது சொல்கிறது.
பொதுத் தேர்தல் வரும் நேரத்தில், இந்த விருது அறிவிக்கப்பட்டிருப்பது தவறான கருத்துக்களை ஏற்படுத்தும், எனக்கு மட்டுமல்லாமல் அரசுக்கும் கூட இது தர்மசங்கடத்தைக் கொடுக்கும். எனவே இதை நான் ஏற்க இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கீதா மேத்தா.
நேற்று அறிவிக்கப்பட்ட பத்மவிருதுகள் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன. காரணம், விருது பெறுவோரில் பலர் பாஜக அல்லது பாஜக ஆதரவு பின்னணி கொண்டவர்கள் என்பதால் இந்த விருது அரசியலாக்கப்பட்டு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.