"நம்பர் கேம்".. தொங்கு சட்டசபையா.. ரிசார்ட்டுக்கு கடத்தலா.. கோவாவை பிடிக்க கோதாவில் இறங்கிய கட்சிகள்
கோவாவில் யார் ஆட்சியை பிடிப்பது என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது
டெல்லி: கோவாவில் ஆட்சியை பிடிக்க பாஜகவும், காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.. கடந்த முறை அதிக அளவில் வெற்றி பெற்றும் ஆட்சியை தவற விட்ட காங்கிரஸ், இந்த முறை பல ஐடியாக்களை கையில் எடுத்து வருகிறது.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில், நாளை ரிசல்ட் வர போகிறது.. நேற்றைய தினம் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி இருந்தது.
அதில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜகவே மீண்டும் வெற்றி பெறும் என்று கணித்து கூறப்பட்டிருந்தாலும், கோவாவில் மட்டும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டது.
தொகுதிகள்
மொத்தம் 40 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. ஆட்சியமைக்க 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்... காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளுமே சமமான இடங்களை பெறக்கூடும் என்றால், ஒருவேளை தொங்கு சட்டசபை அமையும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. அப்படி அமைந்து விட்டால் என்ன செய்வது? என்பது குறித்து இப்போதே பாஜகவும் காங்கிரசும் பிளானில் குதித்துவிட்டன.. தேர்தல் சமயத்தில்கூட, இந்த 2 கட்சிகளுக்குமே சமநிலையில்தான் அங்கு முக்கியத்துவத்தை பெற்றன..
அரசியல்
இப்போதும் அப்படியே அரசியல் தளம் உள்ளது வியப்பை தந்துள்ளது.. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போய், கோவாவை விட்டுவிடக்கூடாது என்பதில் இரு கட்சிகளும் இப்போதே மும்முரமாகிவிட்டது. பாஜகவை பொறுத்தவரை, மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறது... அதனால் அந்த மாநிலத்தின் முதல்வர் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்... அப்போது கோவாவில் ஒருவேளை தொங்கு சட்டசபை அமைந்தால் எப்படி ஆட்சி அமைப்பது என்பது குறித்து மோடியிடம் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது...
பாஜக கணக்கு
அதுபோலவே, கட்சியின் பொறுப்பாளர் தேவேந்திர பட்நாவிஸையும் மும்பையில் சந்திப்பது நடக்கிறது.. இந்த விவகாரத்தில் சில சுயேட்சை வேட்பாளர்களையும் உள்ளே இழுத்துவிடலாம் என்று பாஜக கணக்கு போடுகிறது.. அப்படி மெஜாரிட்டி இடங்களை பிடிக்க முடியாமல் போனால், ஆதரவு கட்சிகளின் நெருக்கடியால் பிரமோத் சவந்த் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன..
கோவா
காங்கிரஸை பொறுத்தவரை, இந்த முறையும் கோவாவை கோட்டைவிட்டுவிடக்கூடாது என்ற பயத்தில் உள்ளது.. கடந்த முறையும் இப்படியேதான் நூலிழையில் ஆட்சியை தவற விட்ட நிலையில் இந்த முறை அந்த தவறு நடக்க கூடாது என்று நினைக்கிறது.. திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்கலாமா என்றும் யோசித்து வருகிறது.. இத்தனைக்கும் டெல்லியில் காங்கிரசுக்கு நேர் எதிராக இருப்பது ஆம் ஆத்மிதான்.. மேற்கு வங்கத்தில் திரிணாமுல்தான்.. சமீப காலமாக மம்தாவுக்கும் காங்கிரசுக்கும் உறவு சரியில்லை.. அப்படி இருந்தும் இந்த முடிவை வேறு வழியில்லாமல் காங்கிரஸ் எடுக்கக்கூடும் என்று தெரிகிறது.
கடும்போட்டி
அதனால்தான், பாஜகவுக்கு எதிராக உள்ள எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க எங்கள் கதவு திறந்தே இருக்கும், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுடன் கோவாவில் கூட்டணி வைக்க தயார் என்று அம்மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் ஓபனாகவே அறிவித்துள்ளார்.. இப்படி இரு கட்சிகளும் ஆட்சி அமைக்க போட்டி போட்டு கொண்டிருந்தாலும், தொங்கு சட்டசபை என்பது உறுதியானால், எம்எல்ஏக்கள் ரிசார்ட்டுக்கு கடத்தப்படும் நாடகத்தையும் கையில் எடுக்கலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. என்ன நடக்க போகிறது என்று பார்ப்போம்..!