''நல்ல வேளை தோனி ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறல''.. சென்னை ரசிகர்கள் குஷி!
டெல்லி: மகேந்திர சிங் தோனி முக்கிய அறிவிப்பை வெளியிட போவதாக அறிவித்து இருந்த நிலையில், ஏதோ முக்கிய அறிவிப்பை தோனி வெளியிடுவார் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
ஆனால் தற்போது அவர் வெளியிட்ட அறிவிப்பை பார்த்த அவரது ரசிகர்கள், 'இதுதான் அந்த உற்சாகமான அறிவிப்பா' என சமூக வலைத்தளத்தில் கலாய்க்க தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் நல்ல வேலை ஐபிஎல்-இல் இருந்து தோனி விலகவில்லை என்று நிம்மதி பெருமூச்சுவிட்டபடியும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தல என்று செல்லமாக அழைக்கப்படுபவர் தோனி.. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 -ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் தனது ஓய்வு அறிவிப்பை தோனி வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ரசிகர்கள் ஆதரவை சற்றும் இழக்காத வீரராக வலம் வருகிறார்.
அடுத்த ஐபிஎல் தொடரில் தல தோனி.. சிஎஸ்கே நிர்வாகம் அளித்த பரபரப்பு தகவல்!
சிஎஸ்கே கேப்டன்
இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரசன நாயகனாக இருக்கும் தோனி ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். இதனால், தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தோனிக்கு இடையே சற்று கூடுதல் பிணைப்பு உண்டு. தோனியை பற்றி எந்த ஒரு செய்தி வந்தாலும் உடனடியாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடும்.
சமூக வலைத்தளத்தில் தோனி
அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறார் தோனி.. தோனியை பொருத்தவரை சமூக வலைத்தளங்களின் அக்கவுண்ட் வைத்திருக்கிறார். பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என முன்னணி சமூக வலைத்தளங்களில் தோனிக்கு அக்கவுண்ட் இருந்தாலும் சக கிரிக்கெட் வீரர்களை போல அவ்வளவாக தோனி ஆக்டிவாக இருக்க மாட்டார். இத்தனைக்கும் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை பல மில்லியன்களை தாண்டும்.
பேஸ்புக்கில் பதிவு
இருந்தாலும் அரிதாக எப்போதாவது சில பதிவுகளை தோனி பதிவிடுவார். இந்த நிலையில், தோனி நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், இன்று பிற்பகல் 2 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட போவதாக அறிவித்து இருக்கிறார். தோனியின் இந்த பதிவு வெளியானதில் இருந்தே அவரது கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் ஹாட் டாபிக்காக இந்த விவகாரம் மாறிப்போயிவிட்டது. நேற்று தொடங்கி தற்போது வரை அவரது ரசிகர்கள் பரபரப்பாக இது குறித்து விவாதித்துக் கொண்டு இருக்கின்றனர்.
ஜடேஜாவுக்கு கேப்டன் பொறுப்பு
கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகினார். ஆனால் ஜடேஜாவுக்கு கேப்டன் பொறுப்பு கைகொடுக்காததால், அவரது விலகலையடுத்து மீண்டும் தோனியே கேப்டனாக பொறுப்பேற்றார். அப்படி பார்த்தால் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி நீடிக்கிறார். இதனால், தோனியின் அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பது குறித்து பெரும் விவாதமே ரசிகர்கள் மத்தியில் நடைபெற்று வருகிறது.
ரசிகர்கள் திக் திக்
ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறப்போகிறாரா அல்லது கேப்டன் பதவியில் இருந்து விலகி புதிய அறிவிப்பை வெளியிடுகிறாரா? என சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் பரபரப்பாக விவாதித்து கொண்டு இருக்கின்றனர். இன்னும் சில மணி நேரங்களில் தோனி ரசிகர்களுடனான லைவ் கலந்துரையாடலில் இந்த அறிவிப்பை வெளியிட உள்ளார். அதுவரை ரசிகர்கள் திக் திக் மனநிலையுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். எனினும் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அடுத்த ஆண்டும் நான் ஆடுவேன் என்று தோனி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு
இந்த நிலையில், உற்சாகமான ஒரு அறிவிப்பை வெளியிடப்போவதாக தோனி அறிவித்து இருந்ததால் நேற்று முதலே அவரது ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆவலுடன் இன்றைய தினத்தை எதிர்பார்த்து இருந்தனர். குறிப்பாக இன்று காலையில் இருந்தே தோனி ரசிகர்கள் பலரும் மணி எப்போது 2 ஆகும் என காத்திருக்காத குறைதான். அந்த அளவுக்கு தோனியின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.
கலாய்த்த நெட்டிசன்கள்
ஆனால், சொன்னது போலவே 2 மணிக்கு நேரலையில் வந்த தோனி, பிஸ்கட் ஒன்றின் விளம்பரத்தை மையப்படுத்தி பேசிவிட்டு சென்றார். ஓய்வு அறிவிப்பா? அல்லது மேலும் சில ஆண்டுகள் சிஎஸ்கேவில் நீடிப்பது பற்றிய அறிவிப்பாக இருக்குமா? என ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் எதிர்பார்த்து இருந்த நிலையில், தோனி விளம்பர நிகழ்ச்சிக்காக இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பது தெரியவந்ததால் பலரும் ஏகத்துக்கும் கடுப்பாகினர். ரசிகர்களின் உணர்வுகளோடு இப்படியா விளையாடுவது என பலரும் சமூக வலைத்தளங்களில் தோனி மீதான அதிருப்தியை கொட்டி வருகின்றனர்.
சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சி
அதே நேரத்தில் ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதும் விலகல் அல்லது சிஎஸ்கேவில் இருந்து விலகல் அல்லது கிரிக்கெட்டில் இருந்து முழுவதுமான ஓய்வு அல்லது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவது போன்ற அறிவிப்பை தோனி வெளியிடாமல் இருந்தது தோனியின் ரசிகர்களுக்கு நிம்மதி பெருமூச்சை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவரது ரசிகர்கள் குறிப்பாக சென்னை ரசிகர்கள் தோனி இந்த ஆண்டு ஐபிஎல்-இல் சென்னை அணியில் விளையாட உள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்றும் சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டு கொண்டாட தொடங்கியுள்ளனர்.