ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சந்திப்பு!
டெல்லி: ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோரை கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இன்று டெல்லியில் சந்தித்து பேசினார்.
தமிழ்நாட்டை சேர்ந்த சுந்தர் பிச்சை, உலகின் முன்னணி நிறுவனமான கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். கூகுள் நிறுவனமானது கூகுள் ஃபார் இந்தியா 2022 நிகழ்ச்சியை இந்தியாவில் நடத்துகிறது. இதில் பங்கேற்க சுந்தர் பிச்சை, இந்தியா வருகை தந்துள்ளார்.
டெல்லியில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது, இந்தியாவில் உலகளாவிய டிஜிட்டல் அறிவை மேம்படுத்த வேண்டும் என சுந்தர் பிச்சையிடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சுந்தர் பிச்சை சந்தித்தார். இச்சந்திப்பின் போது, ஜி20 நாடுகள் கூட்டமைப்புக்கான இந்தியாவின் தலைமைத்துவத்தை ஆதரிப்பதாக சுந்தர் பிச்சை தெரிவித்தார்.
இந்தியாவில் கூகுள் பிக்சல் போன் தயாரிப்புக்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கூகுள் பிக்சல் போன் தயாரிக்க விரும்புகிறாராம் சுந்தர் பிச்சை. இதற்காகவே இந்திய பயணத்தை அவர் மேற்கொண்டிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் கூகுள் பிக்சல் போன் தயாரிப்பு தொடர்பாக அரசு அதிகாரிகளையும் சுந்தர் பிச்சை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். சுந்தர் பிச்சை உடனான சந்திப்பில் இந்தியாவில் கூகுள் பிக்சல் போன் தயாரிப்பு, ஆப் டெவலப்பர் எகோசிஸ்டம் உருவாக்குவது, சைபர் செக்யூரிட்டி, மொபைல் சேவைகளில் இந்திய மொழிகளின் பயன்பாடு குறித்து விவாதிக்க இருப்பதாக மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்தியாவில் சுமார் ரூ75,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே சுந்தர் பிச்சை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மொத்த உலகமே ஒரே விஷயத்தை தேடி இருக்கு! மெய் சிலிர்த்து போன சுந்தர் பிச்சை.. கூகுளில் என்ன நடந்தது?