"குடியுரிமைக்கான அடையாளமா ஆதார்?.." மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு முக்கிய விளக்கம்
டெல்லி: பான் கார்டு தொடங்கி பல்வேறு விஷயங்களிலும் ஆதார் கார்டை இணைக்க உத்தரவிட்டு வரும் நிலையில், ஆதார் கார்டு தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
குடியரசுத் தலைவர் உரையுடன் கடந்த ஜன. 31ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அதைத் தொடர்ந்து பிப். 1ஆம் தேதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்,
கொரோனா பரவல் காரணமாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் நாடாளுமன்றம் நடைபெற்று வருகிறது.
குடியரசு தலைவர் பதவிக்கு பொது வேட்பாளரா.. திமுக சாய்ஸ் யாராக இருக்கும்? எகிறும் எதிர்பார்ப்பு
நாடாளுமன்றம்
இந்நிலையில், மக்களவையில் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது தொடர்பாகக் காங்கிரஸ் எம்பிகள் சார்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஆதார் என்பது குடியுரிமைக்கான ஆதாரம் இல்லை என்பதை என்று சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
குடியுரிமைக்கான அடையாளம் இல்லை
அதாவது ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும், அந்த தகவல்களை யார் அணுக முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்குப் பதிலளித்த மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, "மத்திய அரசு உள்ளிட்ட யாராலும் இந்த டேட்டாக்களை அணுகமுடியாது" என்றார். மேலும், ஆதார் அட்டையை அடிப்படையாக வைத்து குடியுரிமை வழங்கப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "ஆதார் என்பது குடியுரிமைக்கான அடையாளம் இல்லை. எனவே இது குறித்து திட்டங்கள் எதுவும் இல்லை" என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மத்திய அரசு
நாட்டில் உள்ள போலி வாக்காளர் அட்டைகளைக் களைய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காக ஆதார் டேட்டாபேஸை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தான் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை வைத்திருந்தால் அதை எளிதாகக் கண்டுபிடிக்கலாம் என்று அரசு சார்பில் கூறப்பட்டது.
வழக்கறிஞர் கட்டணம்
அதேபோல சில வழக்கறிஞர்கள் அதிகமாகக் கட்டணம் வசூலிப்பது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த கிரண் ரிஜிஜு, "நாட்டில் உள்ள சில வழக்கறிஞர்கள் அதிக கட்டணம் வசூலிப்பது உண்மை தான். இதனால் சாதாரண மக்களால் வழக்கறிஞர்களை பணியமர்த்த முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இதை ஒழுங்குபடுத்துவது அரசுக்குக் கடினமாக உள்ளது என்றாலும் கூட இது தொடர்பாக மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.