கோவின் தளத்தில் இருந்த இந்தியர்களின் தரவுகள்... டார்க் வெப்பில் லீக்கானதா? மத்திய அரசு விளக்கம்
டெல்லி: கோவின் போர்ட்டலில் இருந்து பல முக்கிய தகவல்கள் கசிந்துள்ளதாக வெளியான தகவலை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வேக்சின் பணிகள் மேற்கொள்ளக் கோவின் என்ற தளம் உருவாக்கப்பட்டுள்ளது. வேக்சின் போட்டுக்கொள்ளும் நபர்கள் இதில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

வேக்சின் சான்றிதழ்களையும் இதில் இருந்து தான் தரவிறக்கம் செய்ய முடியும். அதேபோல கொரோனா உறுதி செய்யப்படுவோரின் தகவல்கள் ஆர்டி- பிசிஆர் சோதனை முடிவுகளும் இதில் சேமிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்களின் பெயர், மொபைல் எண், முகவரி, டெஸ்ட் முடிவு உள்ளிட்ட தரவுகளை ஹேக்கர்கள் திருடியுள்ளதாகவும் இவற்றை ஹேக்கர்கள் டார்க் வெப்பில் வெளியிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வ விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் இருப்பினும் முதற்கட்ட விசாரணையில் கோவின் தளத்தில் இருந்து எவ்வித தகவல் கசிவும் ஏற்படவில்லை என்பதையே காட்டுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.எஸ்.சர்மா, "இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளோம். இருப்பினும், முதற்கட்ட விசாரணையில் டேட்டா லீக் குறித்த தகவல் தவறானது என்பது தெரிய வந்துள்ளது. ஏனென்றால் கோவின் தளத்தில் எந்தவொரு நபரின் முகவரியும் அல்லது தடுப்பூசிக்கான RT-PCR சோதனை முடிவுகளும் சேகரிக்கப்படாது.
மேலும், கோவின் போர்ட்டலில் இருந்து எந்தத் தகவலும் கசிந்துவிடவில்லை என்பதையும், மக்களின் முழுத் தரவுகளும் எங்கள் தளத்தில் பாதுகாப்பாக உள்ளது என்பதையும் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications