பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு கெடுபிடி.. மத்திய அரசு அமைத்த 3 குழுக்களின் பணிகள் என்ன?
புதிய தொழில்நுட்ப விதிகள் பின்பற்றப்படாவிட்டால் சமூக ஊடகங்கள் அனுபவிக்கும் சட்ட பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
டெல்லி: பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மற்றும் இணைய வழி தளங்களுக்கு எதிரான புகார்களை விசாரிக்க மத்திய அரசு 3 பேர் அடங்கிய குழுக்களை அமைத்துள்ளது. இந்தக் குழுவில் ஒரு தலைவர் , 2 முழு நேர உறுப்பினர் இடம் பெற்றுள்ளனர்.
இணைய உலகத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் இன்று உலகம் உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டது என்று சொல்லும் அளவுக்கு தகவல் தொடர்பு பரிமாற்றம் பரந்து விரிந்து விட்டது.
உலகின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலையில் உள்ளவர்களுடன் இணைய மூலமாக உரையாடும் அளவுக்கு வசதிகள் பெருகிவிட்டன. ஸ்மார்ட் போன்களின் ஆதிக்கம் அதிகரித்த பிறகு சமூக ஊடகங்கள் வெகுஜன மக்கள் மத்தியில் பெரிதும் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டது.

தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு
சமூக ஊடகங்களில் கணக்கு இல்லாத இன்றைய இளம் தலைமுறையினரை பார்ப்பதே அரிதாகிவிட்டது. மத்திய தர வயது மத்தியினர் கூட பெரும்பாலானோர் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது. இந்தியாவை பொறுத்தவரை பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. சமூக வலைத்தளங்கள் மூலமாக தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு சமூக பிரச்சினைக்குக்கு வழி வகுப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுக்கள் எழாமலும் இல்லை.

புதிய தொழில் நுட்ப விதிகள்
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் திருத்தப்பட்ட புதிய தொழில் நுட்ப விதிகளை வெளியிட்டது. இந்த விதிகளின் படி தற்போது 3 பேர் கொண்ட குறைகள் மற்றும் மேல் முறையீட்டு குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழுக்களில் ஒரு தலைவர் 2 முழு நேர உறுப்பினர் இடம் பெற்றுள்ளனர். முழு நேர உறுப்பினர்களின் பணிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

முதல் குழுவின் தலைவர்
ஒவ்வொரு குழுவும் ஒரு தலைவரையும், ஓய்வு பெற்ற அதிகாரிகளில் இருந்து 2 உறுப்பினர்களையும் கொண்டு இருக்கும். முதல் குழுவுக்கு இந்திய சைபர் கிரைம் மையத்தின் சிஇஒ தலைவராக இருப்பார். இந்தக் குழுவின் முழு நேர உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி அசுதோஷ் சுக்லா, பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் தலைமை பொது மேலாளரும், முதன்மை தகவல் அதிகாரியுமான சுனில் சோனி இருப்பார்கள். 2-வது குழுவிற்கு மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் கொள்கை மற்றும் நிர்வாக பிரிவின் இணைச்செயலாளர் தலைவராக இருப்பார்.

குழுவின் பணி என்ன?
மூன்றாவது குழுவுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூத்த விஞ்ஞானி கவிதா பாட்டியா தலைவராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்ட்டுளது. சமூக ஊடகங்கள் மற்றும் பிற இணைய தளங்களுக்கு எதிராக யூசர்கள் அளிக்கும் புகார்களை இந்தக் குழு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும். அதாவது, பயனர்கள் தங்கள் புகார்கள் பற்றி சமூக ஊடக நிறுவனத்தின் குறை தீர்ப்பு அதிகாரிகள் எடுக்கு முடிவுக்கு எதிராக மத்திய அரசு அமைத்துள்ள குழுக்களிடம் சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் மேல் முறையீடு செய்ய முடியும்.

இணை அமைச்சர் விளக்கம்
இந்த புகார்களுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு காண இந்தக் குழுக்கள் முயற்சி செய்யும். வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் புகார்களை இந்தக் குழுக்கள் விசாரிக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் குறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விளக்கம் அளிக்கும் போது "தொழில்நுட்ப விதிகள் பின்பற்றப்படாவிட்டால், இந்த சமூக ஊடகங்கள் அனுபவிக்கும் பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்படும்" என எச்சரித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications