வீட்டு வாடகைக்கு 18% ஜிஎஸ்டி வரி.. யாருக்கு பொருந்தும்? எப்படி வரியை செலுத்த வேண்டும்! முழு தகவல்
டெல்லி: மத்திய அரசின் புதிய ஜிஎஸ்டி அறிவிப்பின்படி வாடகைக்கு 18% ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு உள்ள நிலையில், அது யாருக்குப் பொருந்தும் என்பதைப் பார்க்கலாம்.
"ஒரே நாடு, ஒரே வரி" என்ற கொள்கையின் அடிப்பையில் மத்திய அரசு கடந்த 2017ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வரியைக் கொண்டு வந்தது. அதன்படி நாடு முழுவதும் ஒரே வரி வசூல் முறை வசூலிக்கப்படுகிறது.
பொருட்களுக்கான வரி விகிதங்கள் குறித்து முடிவு செய்ய இதற்காகத் தனியாக ஜிஎஸ்டி கவுன்சிலும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கவுன்சில் அவ்வப்போது கூடி ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்துப் பரிந்துரைக்கும்.
பயணம் செல்வோர் கவனத்திற்கு.. அதிக கவனம் தேவை.. ஜிஎஸ்டி உங்கள் பர்சை பதம் பார்க்கலாம்!
வாடகை
அந்த பரிந்துரையின் அடிப்படையில் ஜிஎஸ்டி வரிகளில் மத்திய அரசு மாற்றங்களை அறிவிக்கும். அதன்படி கடந்த மாதம் ஜூலை 18ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த புதிய விதிகளின்படி, ஜிஎஸ்டியின் கீழ் பதிவுசெய்த வாடகைக்கு இருப்போர், வீட்டை வாடகைக்கு எடுக்க 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியைச் செலுத்த வேண்டும். அதேநேரம் வீட்டு வாடகைக்கு வசூலிக்கப்படும் இந்த 18 வரி ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
புதிய விதி
முன்னதாக, வணிக பயன்பாட்டிற்காக வாடகைக்கு விடப்படும் இடங்களுக்கு மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வந்தது. வீடு போன்ற வசிக்கும் இடங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் எடுக்கும் போதும் அதற்கு ஜிஎஸ்டி இல்லை. ஆனால், புதிய விதிகளின்படி, ஜிஎஸ்டியில் பதிவு செய்த நிறுவனங்கள், ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசத்தின் (ஆர்சிஎம்) கீழ் வரியைச் செலுத்த வேண்டும். அவர்கள் உள்ளீட்டு வரிக் கிரெடிட்டின் கீழ் செலுத்தப்பட்ட இந்த ஜிஎஸ்டிக்கு விலக்கைப் பெற்றுக் கொள்ளலாம்.
யாருக்கு பொருந்தும்
வீட்டின் உரிமையாளர்கள் ஜிஎஸ்டியை செலுத்த வேண்டியதில்லை. வீட்டில் வாடகைக்கு இருப்போர் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்து இருந்தால் மட்டுமே இது பொருந்தும். தொழில் செய்யாமல் சாதாரணமாகச் சம்பளம் வாங்குவோர் வாடகை எடுத்திருந்தால், அவர்கள் ஜிஎஸ்டி செலுத்த வேண்டியதில்லை. இது தொடர்பாக மத்திய அரசும் விளக்கம் அளித்துள்ளது. அதாவது வணிக நோக்கில் வாடகைக்கு எடுக்கப்படும் வீடுகளுக்கு மட்டுமே ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என தெளிவுபடுத்தி உள்ளது.
47ஆவது கூட்டம்
ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ள ஒருவர், வாடகைக்கு விடப்பட்ட குடியிருப்பில் மூலம் சேவைகளை வழங்கினால் அவர்கள் 18 சதவீத வரியைச் செலுத்த வேண்டியிருக்கும். 47வது ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டத்திற்குப் பிறகு அமல்படுத்தப்பட்ட புதிய வரி விகிதங்களைத் தொடர்ந்தே வாடகை மீதான ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. அதேபோல பணியாளர் குடியிருப்பிற்காக காப்ரேட் நிறுவனங்கள் வாடகைக்கு எடுக்கும்போது, அதற்கும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டி இருக்கும். இதனால் நிறுவனங்களின் செலவுகள் கணிசமாக உயரும்.
ஜிஎஸ்டி பதிவு செய்த நபர் என்றால் என்ன
ஆண்டுக்குக் குறிப்பிட்ட உச்ச வரம்பிற்கு மேல் தொழில் செய்பவர்கள் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த ஜிஎஸ்டி சட்டத்தின் வரம்பு என்பது தொழிலுக்கு ஏற்ப மாறும். சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு நிதியாண்டில் ₹ 20 லட்சமும், பொருட்களை சப்ளே செய்யும் நிறுவனங்களுக்கு ₹ 40 லட்சமும் உச்ச வரம்பாகும்.