குஜராத் வன்முறை : மோடிக்கு எதிராக வழக்கு விவகாரம்- டீஸ்டா செதல்வாட்டுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்!
டெல்லி: குஜராத்தில் 2002-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட மதவன்முறைகளில் பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததால் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மதகலவரம் வெடித்தது. இந்த மதவன்முறையில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். உலக நாடுகளை உலுக்கியது குஜராத் மத வன்முறைகள்.
2002-ம் ஆண்டு குஜராத் மதவன்முறைகளின் போது முதல்வராக இருந்தவர் தற்போதைய பிரதமர் மோடி. குஜராத் வன்முறைகளின் போது காங்கிரஸ் எம்.பி. ஈசான் ஜாப்ரி உள்ளிட்ட 69 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் மோடி உட்பட 64 பேர் மீது குற்றமும் சாட்டப்பட்டது. ஆனால் இது தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழு, மோடி உள்ளிட்டோரை விடுதலை செய்தது.
ஜாமீனை ஏன் மறுக்க வேண்டும்? எந்த காரணமும் இல்லையே.. டீஸ்டா செதல்வாட் வழக்கில் உச்ச நீதிமன்றம்
மோடி விடுதலைக்கு எதிராக வழக்கு
சிறப்பு புலனாய்வுக் குழுவானது மோடி உள்ளிட்டோரை விடுதலை செய்ததை எதிர்த்து ஈசான் ஜாப்ரி மனைவி ஜாகியா ஜாப்ரி, சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினர். இது தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்த உச்சநீதிமன்றம், மோடி உள்ளிட்டோரை சிறப்பு புலனாய்வுக் குழு விடுதலை செய்ததை கடந்த ஜூன் 24-ந் தேதி உறுதி செய்தது.
டீஸ்டா செதல்வாட் கைது
அதேநேரத்தில் 2002-ம் ஆண்டு குஜராத் வன்முறை வழக்குகளில் மோடியை தொடர்புபடுத்தி சிக்க வைக்க சதித் திட்டம் தீட்டியதாக டீஸ்டா செதல்வாட்டை அதிரடியாக கைது செய்தது சிறப்பு புலனாய்வுக் குழு. டீஸ்டாவுடன் முன்னாள் டிஜிபி ஶ்ரீகுமார், ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோரும் கடந்த ஜூன் 25-ந் தேதி கைது செய்யப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையானது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இவ்வழக்குகளில் தங்களுக்கு ஜாமீன் கோரி டீஸ்டா, ஶ்ரீகுமார் தாக்கல் செய்த மனுவை அகமதாபாத் நீதிமன்றம் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து டீஸ்டா செதல்வாட், ஶ்ரீகுமார் இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 25-ந் தேதிக்குள் குஜராத் அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு தாக்கல் செய்த பதிலில், முக்கிய தலைவர் ஒருவருக்கு எதிராக டீஸ்டா சதித் திட்டம் தீட்டினார்; இது தொடர்பாக அரசியல் தலைவர் ஒருவரை சந்தித்தார்; பெரும் தொகை பணம் பெற்றார் என தெரிவித்திருந்தது.
டீஸ்டாவுக்கு ஜாமீன்
இந்நிலையில் இன்று டீஸ்டா செதல்வாட் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது குஜராத் உயர்நீதிமன்றத்தில் டீஸ்டாவின் ஜாமீன் மனு தாமதமானது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. பின்னர் டீஸ்டா செதல்வாட்டுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.