புத்தாண்டு பிறந்த 1 மணிநேரத்திலேயே டெல்லி, ஹரியானாவை அதிரவைத்த நிலநடுக்கம்- ரிக்டரில் 3.8 ஆக பதிவு
டெல்லி: 2023-ம் ஆண்டு புத்தாண்டு பிறந்த 1 மணிநேரத்திலேயே டெல்லி, ஹரியானாவில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. புத்தாண்டின் முதல் நாளிலேயே டெல்லி, ஹரியானாவை அதிரவைத்த நிலநடுக்கம் ரிக்டரில் 3.8 ஆக பதிவாகி இருந்தது.
ஆங்கிலப் புத்தாண்டு தினம் உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 2022-ம் ஆண்டு விடைபெற்று 2023-ம் ஆண்டுக்குள் உலகம் நுழைந்திருக்கிறது. உலகின் அனைத்து பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி இருந்தன.

சீனா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதி உச்சத்தில் இருக்கின்றன. ஆனாலும் உலகம் வழக்கமான உற்சாகத்துடன் புத்தாண்டு கொண்டாட்டங்களில் மூழ்கியது. இந்தியாவிலும் வழக்கமான உற்சாகத்துடன் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
டெல்லி, ஹரியானாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அதிகாலை 1.19 மணிக்கு திடீரென நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த பொதுமக்கள் நிலநடுக்கத்தால் அதிர்ந்து போய் சமூகவலைதளங்களில் குவிந்தனர். சமூகவலைதளங்களில் நிலநடுக்கம் ஏற்படும் அளவுக்கு பதிவுகளைப் போட்டு தள்ளினர். இதனால் சமூக வலைதளங்களில் நிலநடுக்கமா? என கிண்டல் செய்யும் அளவுக்கு பதிவிட்டுக் கொண்டிருந்தனர்.
டெல்லி, ஹரியானாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டரில் 3.8 ஆக பதிவாகி இருந்தது. ஹரியானா மாநிலத்தின் ஜஹ்ஜர் நகரில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லி, ஹரியானா உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. பொதுமக்களுக்கும் காயம் ஏற்படவில்லை. கடந்த நவம்பர் மாதமும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் நில நடுக்கம் உணரப்பட்டிருந்தது. அது ரிக்டரில் 5.4 ஆக பதிவாகி இருந்தது.












Click it and Unblock the Notifications