அதிமுக பொதுக்குழு வழக்கில் திருப்பம்: “உத்தரவை தவறாக புரிந்துகொண்டு ஐகோர்ட் தீர்ப்பு” - நகலால் ஷாக்!
டெல்லி : அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தங்களது தீர்ப்பை தவறாக புரிந்துகொண்டு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்க உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இந்தத் தீர்ப்பின் எழுத்துப்பூர்வ நகல் வெளியாகியுள்ளது.
ஜூலை 6ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு அளித்த உத்தரவில், பொதுக்குழுவை நடத்தலாம் என்றோ, தடை விதிக்கவோ எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும், ஐகோர்ட் தனி நீதிபதி தங்கள் தீர்ப்பை தவறாக புரிந்து கொண்டு உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நான் அதிமுக எம்.பி.. மீட்டிங்குக்கு நான் போறேன் - அடித்து ஆடிய ரவீந்திரநாத்.. பக்கத்தில் ஆர்.தர்மர்!
அதிமுக பொதுக்குழு வழக்கு
அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதிக்கக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது எடப்பாடி பழனிசாமியும் கேவியட் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை கடந்த ஜூலை 6ஆம் தேதி விசாரித்தது உச்ச நீதிமன்றம். உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் நாங்கள் தலையிட விரும்பவில்லை, நாங்கள் பொதுக்குழுவிற்கு தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்து, உயர் நீதிமன்றத்திலேயே தீர்த்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டனர்.
ஐகோர்ட் தீர்ப்பு
இதையடுத்து, அந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளதால் பொதுக்குழுவை நடத்தலாம். பொதுக்குழுவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததால், அதனை மீற முடியாது, சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம். விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் எனத் தீர்ப்பளித்தது.
பொதுக்குழு
இந்த தீர்ப்பை அடுத்து, ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்டு, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்தெடுக்கப்பட்டார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்குவது தொடர்பான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
மீண்டும் ஓபிஎஸ் முறையீடு
இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுகுழுவுக்கு அனுமதி அளித்த ஐகோர்ட் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கூட்டத்தை நடத்த அதிகாரம் இல்லை. எனவே, பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். பொதுக்குழுவில் நிறைவேற்றப்ட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரினார்.
தீர்ப்பு நகல்
இதையடுத்து இந்த வழக்கை நேற்று முன் தினம் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், "இந்த விவகாரத்தில் நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. கட்சி பொதுக்குழு விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்கலாம்" எனத் தெரிவித்தனர். இந்த தீர்ப்பின் எழுத்துப்பூர்வ நகல் வெளியாகியுள்ளது. அதில், உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற உத்தரவு மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தவறாகப் புரிந்துகொண்ட ஐகோர்ட் நீதிபதி
பொதுக்குழுவை நடத்தலாமா, கூடாதா என கடந்த ஜூலை 6-ஆம் தேதி உச்சநீதிமன்றம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றே கூறினோம், ஆனால் எங்கள் தீர்ப்பை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தவறாக புரிந்து கொண்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் என அதிருப்தி தெரிவித்துள்ளனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
Recommended Video
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
மேலும், அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும், சுதந்திரமாக, சட்டவிதிகளுக்கு உட்பட்டு விசாரணை நடத்தி, உத்தரவுகளை வழங்க வேண்டும் எனவும் வழக்கின் விசாரணை முடியும் வரை, எந்தவொரு புதிய முடிவையும் பொதுக்குழு எடுக்கக் கூடாது என மனுதாரர்களுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.