தமிழகத்தில் 2 நாட்களுக்கு கன மழை.. மஞ்சள் எச்சரிக்கை பிறப்பிப்பு
Recommended Video
டெல்லி: நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 1ம் தேதி வரை, தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கஜா புயல் காரணமாக கடந்த ஒரு வாரம் முன்புவரை பெய்து ஓய்ந்துள்ளது மழை. இருப்பினும் இது பற்றாக்குறை அளவை போக்குவதாக இல்லை. இந்த நேரத்தில்தான், மற்றொரு கன மழை தமிழகத்திற்கு வருகை தர உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தாய்லாந்தை ஒட்டியுள்ள சியாம் வளைகுடா பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அது அந்தமான் கடல் பகுதிக்கு நகர்ந்து வருகிறது. இது தமிழக கடற்கரை பகுதிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கன மழை
இந்த நிலையில், தமிழக கடலோர பகுதிகளில் நவம்பர் 30ம் தேதியும், டிசம்பர் 1ம் தேதியும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, நிர்வாகங்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு, மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
மஞ்சள் அலர்ட்
கஜா புயலுக்கு முன்பாக ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டது. எச்சரிக்கையை போலவே, கஜா புயலால் சேதமும் மிக அதிகமாக இருந்தது. மஞ்சள் எச்சரிக்கை எனப்படுவது, ரெட் அலர்ட்டுக்கு முந்தைய நிலையாகும்.
தென் மாவட்டம்
தென் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு இருக்கும், வட தமிழகத்தில் மிதமான மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடலோரம்
உள் மாவட்டங்களைவிடவும், கடலோர மாவட்டங்களில்தான் கன மழை கொட்டும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.