குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி டூ பூஸ்டர்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்!
டெல்லி: உலகின் முதல் டி.என்.ஏ தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாகவும், இந்தியாவில் 15 வயது முதல் 18 வயதுக்குள் உள்ளவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதிமுதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு இடையே ஆற்றிய உரையில் கூறியுள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை நாளான இன்று பிரதமர் நரேந்திரமோடி இன்று தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றுவதாக தகவல் வெளியானது. ஓமிக்ரான் அச்சம் காரனமாக பல முக்கிய அறிவிப்புகள் இருக்கலாம் என்பதால் பிரதமரின் இந்த பேச்சு முக்கியத்துவம் பெற்றிருந்தது.
இரவு சுமார் 9.45 மணியளவில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கூறி உரையை தொடங்கிய பிரதமர், உலகின் பல நாடுகளில் ஓமிக்ரான் தொற்று தீவிரமாக பரவிவருகிறது, இந்தியாவிலும் பலருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், நாம் அனைவரும் மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும். முகக்கவசம் அணிவது, கைகளை அவ்வப்போது கழுவுவதை மறந்துவிடக்கூடாது என்றார்.

மக்கள் பதற்றமடைய வேண்டாம்
ஓமிக்ரான் குறித்து பொதுமக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம், ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன எனக் கூறிய பிரதமர், இந்தியாவில் 18 லட்சம் கொரோனா சிகிச்சை படுக்கைகள் தயாராகவுள்ளன எனவும், குழந்தைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், 90,000 குழந்தைகளுக்கான கொரோனா படுக்கைகள் தயாராகவுள்ளன எனக் கூறினார்.

உலகின் முதல் டி.என்.ஏ. தடுப்பூசி
கடும் சவால்களுக்கு இடையே தடுப்பூசி திட்டம் பாதுகாப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது எனக் கூறிய பிரதமர் நரேந்திரமோடி, மாநில அரசுகளுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது எனவும், இந்தியாவில் மேலும் பல கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன என தெரிவித்தார். உலகின் முதல் டி.என்.ஏ தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது எனவும், மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துகளும் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன , கொரோனா தடுப்பூசி திட்டம் விஞ்ஞான முறையில் நடைபெற்று வருகிறது எனக் கூறினார்.

தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதம்
தொடர்ந்து மக்களிடையே பேசிய பிரதமர் மோடி, கொரோனாவை சமாளிக்க தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதமாக உள்ளது எனவும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தொடர்ந்து நாம் முன்னணியில் இருந்து வருகிறோம் என்றார், இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பிவரும் நிலையில், இந்திய பொருளாதாரமும் சீரான பாதையில் சென்று கொண்டிருக்கிறது எனக் கூறிய பிரதமர், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது என்று பேசினார்.

ஜன.10 முதல் பூஸ்டர் தடுப்பூசி
இந்தியாவில் 15-18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதிமுதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனவும், இந்தியாவில் முன்களப் பணியாளர்களுக்கு ஜனவரி 10 முதல் கூடுதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்றார். அதேபோல் 60 வயதைக் கடந்தவர்கள், இணை நோய்கள் உள்ள நபர்களும் ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாம் எனவும், கோவா, உத்தராகண்டில் முதல் தவணை 100% செலுத்தப்பட்டுள்ளதைபோல அனைத்து இடங்களிலும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications