ஹிஜாப் விவகாரம்:மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? வராத பதில்.. லோக்சபாவில் திமுக, காங். வெளிநடப்பு
டெல்லி: ஹிஜாப் விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சி எம்பிக்கள் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
Recommended Video
கர்நாடகாவில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டு கல்வி நிறுவனங்களுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. இதை எதிர்த்து கல்வி நிறுவனங்களின் வெளியே மாணவிகள் போராடி வருகிறார்கள்.
இவர்கள் ஹிஜாப்புடன் உள்ளே வர அனுமதி அளித்தால், நாங்கள் காவி துண்டுகளுடன் வருவோம் என இந்துத்துவா மாணவர்கள் சிலர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் கல்வீச்சு சம்பவங்களும் நடைபெறுகின்றன.
ஹிஜாப் அணிந்த மாணவிகளை வகுப்பறையில் தனியாக அமர வைத்தது நவீன தீண்டாமை.. ஹைகோர்ட்டில் அனல் பறந்த வாதம்
தேசிய கொடி
இன்றைய தினம் உச்சகட்டமாக ஒரு கல்லூரியில் தேசிய கொடியை இறக்கிவிட்டு அதற்கு பதிலாக காவிக் கொடியை மாணவர் ஒருவர் ஏற்றியதால் பதற்றம் ஏற்பட்டது. இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் நாளை முதல் கர்நாடகாவில் உள்ள அனைத்து உயர்நிலை பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடர்
இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது மக்களவையில் ஹிஜாப் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகள் தடுத்து நிறுத்தப்படும் அட்டூழியம் குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பப்பட்டது.
மார்க்சிஸ்ட்
இதையடுத்து அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க மறுத்ததாக கூறி காங்கிரஸ், திமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
மரபுகள்
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ஹிஜாப் விவகாரம் குறித்து நாங்கள் கேள்வி எழுப்பினோம். நாட்டில் ஹிஜாப் அணிவது குற்றமில்லை. நாட்டில் உள்ள ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், மரபுகளை தடையின்றி பின்பற்றுவதற்கு சுதந்திரம் உண்டு.
முஸ்லீம் சகோதரிகள்
ஆனால் தற்போது முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த சகோதரிகள் மீது சிலர் குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இதனால்தான் இந்த ஹிஜாப் விவகாரம் குறித்து மத்திய அரசின் நிலைப்பாட்டை கேட்டோம். ஆனால் எங்கள் கோரிக்கையை கேட்கவே இல்லை. அதனால் வெளிநடப்பு செய்துவிட்டோம் என்றார்.
சட்டம் ஒழுங்கு
முன்னதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில் அனைத்து மாணவர்களும் பள்ளி, கல்லூரிகளால் பரிந்துரைக்கப்படும் உடை கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் இருக்க வேண்டும். மாணவர்களை யார் தூண்டிவிடுகிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.