கொரோனா பரவலுக்கு கும்பமேளாதான் காரணமா? இந்துக்களுக்கு எதிரான சதி-காங். மீது இந்து துறவிகள் பாய்ச்சல்
டெல்லி: கொரோனா பரவலுக்கு ஹரித்வார் கும்பமேளாதான் காரணம் என பொய் பிரசாரம் செய்வதா? என காங்கிரஸ் கட்சிக்கு இந்து துறவிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறும். ஹரித்வார் கங்கை நதியில் கும்பமேளா காலத்தின் புனித நாட்களில் நீராடுவதை இந்துக்கள் புண்ணியமாக கருதுகின்றனர்.
தமிழகத்தில் கரும்பூஞ்ஜை தொற்றுக்கு முதல் பலி.. சிகிச்சை பலனின்றி.. தூத்துக்குடி நபர் உயிரிழப்பு
இதனால் கும்பமேளா காலங்களில் பல்லாயிரக்கணக்கான சாதுக்கள், பல லட்சம் பொதுமக்கள் கங்கை நதியில் நீராடுவர். இந்த ஆண்டு கொரோனா 2-வது அலை தொடங்கி இருந்த போதும் ஹரித்வார் கும்பமேளாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
கொரோனா கட்டுப்பாடுகள் இல்லை
கும்பமேளாவில் பங்கேற்றவர்கள் முக கவசங்களும் அணியவில்லை; சமூக இடைவெளியையும் பின்பற்றவில்லை. இது மிகப் பெரும் சர்சையானது. கும்பமேளாவில் பங்கேற்றவர்களில் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று உறுதியும் செய்யப்பட்டது. அதேநேரத்தில் கும்பமேளாவில் பங்கேற்று திரும்பியவர்களால்தான் மாநிலங்களில் கொரோனா பரவியது என்கிற புகாரும் எழுந்தது.
பிரதமர் மோடி தலையீடு
இதன்பின்னர் பிரதமர் மோடி தலையிட்டு கும்பமேளா நிகழ்ச்சிகளை பாதியில் முடித்து வைத்தார். இதனிடையே கொரோனா பரவலுக்கு கும்பமேளாதான் காரணம் என பிரசாரம் செய்யுமாறு டூல்கிட் ஒன்றை காங்கிரஸ் உருவாக்கி இருப்பதாக பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டினர். ஆனால் காங்கிரஸ் கட்சி இதனை திட்டவட்டமாக நிராகரித்தது அத்துடன் போலி டூல்கிட்டை உருவாக்கியதாக பாஜக தலைவர்கள் மீது டெல்லி போலீசிலும் காங்கிரஸ் தலைவர்கள் புகார் கொடுத்தனர். இதனடிப்படையில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, சம்பித் பத்ரா ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது.
கும்பமேளாவை காரணம் என்பதா?
இதனிடையே கும்பமேளாவால்தான் கொரோனா பரவியது என்கிற குற்றச்சாட்டை இந்து மத துறவிகள் மறுத்துள்ளனர். இது தொடர்பாக சாதுக்கள் அமைப்பான ஜூனா அகாடாவின் மகாமண்டலேஸ்வரர் சுவாமி அவ்தேஸானந்த் கூறுகையில், கும்பமேளா என்பது இந்திய கலாசாரத்தின் அடையாளம். கும்பமேளா தொடங்கப்பட்ட காலத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா பரவல் இல்லை. பிற மாநிலங்களில் கொரோனா அதிகரித்த நிலையில்தான் உத்தரகாண்ட்டிலும் கொரோனா பரவியது. கும்பமேளா குறித்து அவதூறு பரப்புபவர்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். இத்தகைய அரசியல் விளையாட்டுகள் ஆரோக்கியமானது அல்ல என்றார்.
வெறும் அடையாளத்துக்காக மட்டும்..
அதேபோல் சுவாமி கைலாசனந்த் கிரி கூறுகையில், வழக்கமாக கும்பமேளாவில் கோடிக்கணக்கான பக்தர்கள் கூடுவர். இந்த முறை லட்சக்கணக்கில் கூட பொதுமக்கள் கூடவில்லை. இந்த ஆண்டு கும்பமேளா என்பது வெறும் அடையாளத்துக்காக மட்டுமே நடத்தப்பட்டது என்றார்.
பாபா ராம்தேவ் ஆவேசம்
யோகா குரு என அழைத்து கொள்ளும் பாபா ராம்தேவ், இந்துக்களுக்கு எதிரான சதிதான் கொரோனாவுக்கு கும்பமேளா காரணம் என பிரசாரம் செய்வது. இது மிகப் பெரிய குற்றம். 100 கோடி இந்துக்களை அவமதிக்கும் இந்த நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்துக்கள் விரோத, இந்தியாவுக்கு எதிரான சக்திகளை இந்துக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள் என்றார்.