என் வீடே பேங்க்தான்.. மே.வங்கத்தை அதிர வைத்த அர்பிதா முகர்ஜி.. அமலாக்கத்துறையிடம் பரபர வாக்குமூலம்
டெல்லி: பள்ளி சேவை ஆணையம் மற்றும் மேற்கு வங்க முதன்மைக் கல்வி வாரியத்தில் ஆட்சேர்ப்பு விவகார ஊழல் வழக்கில் மேற்குவங்க அமைச்சர் பார்த்தா மற்றும் அவருடன் தொடர்புடைய அர்பிதா முகர்ஜி ஆகியோர் சமீபத்தில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பணம் குவிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய வங்கி போல தன்னுடைய வீட்டின் அறை பயன்படுத்தப்பட்டதாக அர்பிதா முகர்ஜி விசாரணையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மமதா பானர்ஜி
மேற்குவங்கத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான திரினாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை இந்த அரசு கடைப்பிடித்து வருகிறது. கட்சியின் முன்னாள் பிரமுகர் சுவேந்து அதிகாரி பாஜக பக்கம் தாவி சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மமதாவுக்கு எதிராகவே களம் கண்டார். இந்நிலையில் இம்மாநிலத்தில் அரசியல் களம் எப்போதும் பரபரப்பாகவே இருந்து வருகிறது.

பள்ளி சேவை
இப்படியான சூழலில் பள்ளி சேவை ஆணையம் மற்றும் மேற்கு வங்க முதன்மைக் கல்வி வாரியத்தில் ஆட்சேர்ப்பு விவகாரத்தில் அதாவது ஆசிரியர் தேர்வு விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாக அவ்வப்போது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதனையடுத்து கடந்த 22ம் தேதி மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிரடியாக ரெய்டில் இறங்கியது. இந்த ஊழல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சட்டார்ஜிக்கு தொடர்புடைய 13 இடங்களில் சோதனையை மேற்கொண்டது.

அர்பிதா முகர்ஜி
பார்த்தாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான இடங்களிலும் தொடர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர் ஆசிரியர் ஆட்சேர்ப்பு பணியில் ஊழல் செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டவராவார். இதனையடுத்து ரெய்டில் சுமார் ரூ.20 கோடி அளவில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பணம் பள்ளி சேவை ஆணையத்தில் ஆட்சேர்ப்பு விவகாரத்தில் சட்டத்திற்கு புறம்பாக பெறப்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். இதனைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அமலாக்கத்துறை
இந்நிலையில் இருவரிடமும் அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் அர்பிதா முகர்ஜி, "தன்னுடைய வீட்டில் ஒரு அறையை பார்த்தா பணம் சேமித்து வைக்க பயன்படுத்தினார். ஆனால் இந்த அறையில் அவரும், அவருக்கு நெருக்கமான சிலரும் மட்டுமே உள்ளே நுழைய முடியும். எனது வீட்டின் இந்த அறை ஒரு மினி பேங்க் போல பயன்படுத்தப்பட்டது. இந்த அறைக்கு வாரத்திற்கு ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை பார்த்தா வந்து செல்வார்" என்று அமலாக்கத்துறை விசாரணையில் அர்பிதா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications