சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பிறகு.. காஷ்மீரில் சொத்து வாங்கிய பிற மாநிலத்தவர்கள் எண்ணிக்கை 34 பேர்தான்!
டெல்லி : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு வெளிமாநிலங்களைச் சேர்ந்த 34 பேர் சொத்துக்களை வாங்கியுள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.
1951ஆம் ஆண்டில், ஜம்மு-காஷ்மீருக்கு என்று தனியே சட்டமன்றம் கூட்ட அனுமதி வழங்கப்பட்டது. நவம்பர் 1956 அன்று அம்மாநிலத்துக்கான அரசியலமைப்பு எழுதி முடிக்கப்பட்டு, 1957ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று சிறப்பு அந்தஸ்து அமலுக்கு வந்தது.
இந்நிலையில் பெரும்பான்மையுடன் இரண்டாவது தடவையாக ஆட்சியில் அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு , காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி நீக்கியது

370ஆவது சட்டப்பிரிவு நீக்கம்
ஜம்மு-காஷ்மீருக்கான 370ஆவது சட்டப்பிரிவு நீக்கம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும், சர்ச்சைகளும் அப்போது ஏற்பட்ட நிலையில், மத்திய அரசின் சார்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின்னர் அதாவது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் வகையில் யூனியன் பிரதேசமான மாற்றப்பட்ட பிறகு ஜம்மு-காஷ்மீரில் அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியன வலுவான நிலையை அடைந்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

370வது சட்டப்பிரிவு
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து 34 பேர் அங்கு சொத்துக்களை வாங்கியுள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசி ஃபஸ்லுர் ரஹ்மானின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் இந்த விவரங்களைப் பகிர்ந்துள்ளார்.

ஆர்டிகிள் 370 ரத்து
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீருக்கு வெளியில் இருந்து இந்த யூனியன் பிரதேசத்தில் சொத்து வாங்கியவர்களின் எண்ணிக்கையைக் கூற உள்துறை அமைச்சர் தயாரா என்று ஹாசி கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர்"அரசு வழங்கிய தகவல்களின்படி ஜம்மு காஷ்மீரில், 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு வெளியில் இருந்து 34 பேர் யூனிய பிரதேசத்தில் சொத்துக்களை வாங்கியுள்ளனர் எனவும், ஜம்மு, ரியாசி, உதம்பூர் மற்றும் கந்தர்பால் ஆகிய மாவட்டங்களில் சொத்துக்கள் உள்ளன என்று அமைச்சர் கூறினார்.

நிலம் கொள்முதல் சட்டங்கள்
ஆகஸ்ட் 5, 2019க்கு முன்பிருந்து ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படாதபோது, முந்தைய மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து இருந்தது. இதனால் அம்மாநிலத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்கள் மட்டுமே அங்கு நிலம் மற்றும் சொத்துக்களை வாங்க முடிந்தது. இந்நிலையில் மத்திய அரசு 2019ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியதையடுத்து, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து உத்தரவிட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் நிலம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான சட்டங்களையும் மத்திய அரசு மாற்றி, புதிய நிலம் கொள்முதல் சட்டங்கள் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications