ராஜினாமா செய்த பிறகு எப்படி மீண்டும் முதல்வராக்க முடியும்? உத்தவ் வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி
உத்தவ் தாக்கரே சட்ட சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமல் ராஜினாமா செய்த பிறகு நாங்கள் எப்படி மீண்டும் அவரை முதல்வர் பதவியில் அமர்த்த முடியும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
டெல்லி: உத்தவ் தாக்கரே சட்ட சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமல் ராஜினாமா செய்த பிறகு நாங்கள் எப்படி மீண்டும் அவரை முதல்வர் பதவியில் அமர்த்த முடியும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மகராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டது குறித்து சில கருத்துக்களை உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தரப்பு முறையிட்டது.
மகாராஷ்டிராவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா - சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது.
எனினும், முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வதில் இந்தக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து தனது கொள்கைக்கு எதிரான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி அரசை அமைத்தது.

பெரும்பான்மையை நிரூபிக்க..
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனாவில் பிளவு ஏற்பட்டது. ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சென்று பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். இதனால், உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மை இழந்தது. இதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தின் அப்போதைய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை காட்ட உத்தவ் தாக்கரேவிற்கு உத்தரவிட்டார்.

ஆளுநருக்கு எதிராக கருத்து
பெரும்பான்மை இல்லாத நிலை இருந்ததால் உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, பாஜக ஆதரவுடன் ஏக்னாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த விவகாரம் தொடர்புடைய இருதரப்பு மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் நடந்த விசாரணையின் போது, உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு எதிராக பரபரப்பு கருத்தை கூறியது.

முதல்வருக்கு ஆளுநர் உத்தரவிட முடியுமா
இது தொடர்பாக நீதிபதிகள், "ஆளுநரின் அதிகாரத்தை நாங்கள் கேள்வி எழுப்ப விரும்பவில்லை. ஆனால் அரசை கவிழ்ப்பதில் ஆளுநர் துரிதமாக செயல்பட கூடாது என்பது தான் எங்களது கருத்து. ஆளும் சிவசேனாவில் உள்கட்சி பிரச்சினை எழுந்தபோது, முதல்வர் உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டதில் அவசரம் காட்டினார். உள்கட்சி பிரச்சினைக்காக பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு ஆளுநர் உத்தரவிட முடியுமா? என பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு எழுப்பியிருந்தது.

மீண்டும் முதல்வராக பதவி ஏற்க
இந்த நிலையில், நீதிபதிகளின் பரபரப்பு கருத்துக்களை மேற்கோள் காட்டி உச்ச நீதிமன்றத்தில் நேற்று உத்தவ் தாக்கரே தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் முறையீடு ஒன்றை வைத்தார். அதில், பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆளுநர் உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், ''உத்தவ் தாக்கரேவை மீண்டும் முதல்வராக பதவி ஏற்க உத்தரவிட கூறுவது போல் உங்கள் கோரிக்கை உள்ளது.

விசாரணை நிறைவு
தன்னால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியாது என்று கருதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமல் ராஜினாமா செய்தவரை எப்படி மீண்டும் பதவி ஏற்க வைக்க முடியும். ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டு இருந்தால் கூட ஆளுநரின் உத்தரவை ரத்து செய்வது குறித்து நாங்கள் முடிவு எடுத்து இருக்க முடியும்" என்றனர். இந்தநிலையில் மகாராஷ்டிர அரசியல் நெருக்கடி தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் நேற்று நிறைவு செய்தது. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications