அவ்வளவு பெரிய மசூதியை திட்டமிடாமல் 5 மணி நேரத்தில் இடிக்க முடியுமா? முன்னாள் உள்துறை செயலாளர் கேள்வி
டெல்லி: அது எப்படி, முன்கூட்டியே திட்டமிடாமல், அவ்வளவு பெரிய பாபர் மசூதி 5 மணி நேரத்துக்குள் இடித்து தள்ளப்பட்டிருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார், முன்னாள் உள்துறைச் செயலாளர் மாதவ் கோட்போலே.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலகட்டத்தில் மத்தியில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நரசிம்மராவ் ஆட்சி நடந்தது. அந்த ஆட்சியில் உள்துறை செயலாளராக பதவி வகித்தவர்தான் மாதவ் கோட்போலே.
1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 'அநீதியான தீர்ப்பு'.. கறுப்பு நாள் இது.. தமிமுன் அன்சாரி கடும் தாக்கு
அனைவரும் விடுதலை
குற்றம் சாட்டப்பட்ட அத்வானி உட்பட அனைவரும், விடுதலை செய்யப்படுவதாக சிறப்பு நீதிபதி எஸ்.கே.யாதவ் அறிவித்தார். பாபர் மசூதி இடிப்பில் சதி இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று நீதிபதி கூறினார். இது தொடர்பாக ஹப்போஸ்ட் இந்தியா இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ள மாதவ் கோட்போலே கூறியிருப்பதை பாருங்கள்.
திட்டமிடாமல் முடியாதே
5 மணி நேர கால இடைவெளிக்குள் அவ்வளவு பெரிய மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டு உள்ளது. முன்கூட்டியே திட்டமிடாமல் அல்லது தயாராகாமல் இதன் பின்னணியில் யாருமில்லாமல் இவ்வாறு ஒரு செயல் நடக்க சாத்தியம் கிடையாது. அப்படி இருக்கும்போது பாபர் மசூதி இடிப்பின் பின்னணியில் சதித் திட்டம் இல்லை என்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.
28 வருடங்கள் நீட்டிப்பு
இந்த தீர்ப்பு 28 வருடங்கள் கழித்து வெளியாகியுள்ளது. இதை நமது நீதி அமைப்பு மற்றும் குற்றவியல் சட்ட அமைப்பு பற்றிய வர்ணனையாக பார்க்க வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
32 பேர் மீது குற்றச்சாட்டு
ராமர் கோவில் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாகக் கூறி 1992 டிசம்பர் 6 ஆம் தேதி 'கர சேவகர்களால்' மசூதி இடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 48 பேர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன, ஆனால் விசாரணையின் போது 16 பேர் இறந்துவிட்டனர். இதையடுத்து, அத்வானி உட்பட 32 பேருக்கு எதிராக வழக்குகள் நடைபெற்று வந்தன.
அத்வானி வரவேற்பு
இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள அத்வானி, தீர்ப்பை முழு மனதாக வரவேற்பதாக தெரிவித்தார். சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அத்வானி வீட்டுக்கேச் சென்று ஆசி பெற்று வாழ்த்து தெரிவித்து வந்தார்.