பணமதிப்பு நீக்கத்திற்கு பிறகு.. இரட்டிப்பான ரூபாய் நோட்டு புழக்கம்.! அடேங்கப்பா இத்தனை லட்சம் கோடியா
டெல்லி: மத்திய அரசு கடந்த 2016இல் வெளியிட்ட பணமதிப்பு நீக்கம் அறிவிப்பு சரியானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அப்போது புழக்கத்தில் இருந்த நோட்டுகள் எவ்வளவு? இப்போது அது எந்தளவுக்கு அதிகரித்துள்ளது என்பதைப் பார்க்கலாம்.
கடந்த 2016 நவ.8ஆம் தேதி பணமதிப்பு நீக்கம் குறித்த அறிவிப்பைப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஒரே இரவில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால் அப்போது நாட்டில் குழப்பம் ஏற்பட்டது.
புழக்கத்தில் இருந்த சுமார் 85% நோட்டுகள் ஒரே நேரத்தில் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் நிலைமை சரியாகப் பல வாரங்கள் ஆனது. இதற்கு எதிராகப் பலரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தனர்.
கிம் ஜாங் உன்னுக்கு அடுத்த இடத்தில் இருந்த வடகொரிய ராணுவ அதிகாரி நீக்கம்.. ஏன் என்னாச்சு?
பணமதிப்பு நீக்கம்
இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பை அளித்திருந்தது. அதில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை சரியானது என்றே பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட பணமதிப்பு நீக்கத்தை அப்போதே சில வல்லுநர்கள் எதிர்த்தனர். அதேநேரம் பலரும் முதலில் இதை ஆதரித்தனர். அவர்கள் முதலில் கருப்புப் பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை என்றார்கள். அதன் பிறகு டிஜிட்டல் பொருளாதாரம், போலி நோட்டுகள் எனப் பல விளக்கங்களைக் கொடுத்தனர். பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டுப் பல ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், இன்னும் நம் நாட்டில் ரொக்கம் தான் கிங்காக உள்ளது.
இரட்டிப்பு
கடந்த 2016இல் பிரதமர் மோடி பணமதிப்பு நீக்கத்தை அறிவித்த போது, நாட்டில் ரூ. 17.74 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. பணமதிப்பு நீக்க அறிவிப்பிற்குப் பிறகு இது ரூ. 9 லட்சம் கோடியாகக் குறைந்துவிட்டது. இப்போது ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கடந்த 2022 டிசம்பர் 23இல் இது ரூ.32.42 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் புழக்கத்தில் இருந்த நோட்டுகளின் மதிப்பு இரட்டிப்பாகியுள்ளது. பணமதிப்பு நீக்க அறிவிப்பு சமயத்தில் பலரும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறைக்கு மாறினாலும் கூட அவர்களில் பலர் இப்போது மீண்டும் ரொக்கத்திற்கு மாறிவிட்டதையே இது காட்டுகிறது.
தொடர்ந்து அதிகரிப்பு
பணமதிப்பு நீக்க அறிவிப்பின் போது, பழைய நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய குறிப்பிட்ட கால அவசாகத்தை மத்திய அரசு அளித்திருந்தது. இந்த காலகட்டத்தில் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பெருந்தொகை மீண்டும் வங்கிக்கு வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதாவது அப்போது ரூபாய் 15.4 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில், அதில் 99.3 சதவிகிதம், அதாவது ரூ.15.3 லட்சம் கோடி நோட்டுகள் மீண்டும் வங்கிக்கு வந்துவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் பணமதிப்பு நீக்கம் மத்திய அரசின் நோக்கங்களை நிறைவேற்றியதாக என்பது குறித்த கேள்விகளை எழுப்பியது.
நிதியமைச்சர்
கடந்த டிசம்பர் 19, 2022இல் மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமார விளக்கமளித்தார்.. அதில், "மார்ச் 2017இல் புழக்கத்தில் இருந்த நோட்டுகள் 20 சதவீதத்திற்கும் மேல் சரிந்து ரூ.13.1 லட்சம் கோடியாக இருந்தது.. ஆனால், அதன் பிறகு இது தொடர்ந்து அதகிரத்தே வருகிறது.. இது மார்ச் 31, 2018 அன்று 37.67 சதவீதம் உயர்ந்து ரூ.18.03 லட்சம் கோடியாக இருந்தது. மார்ச் 31, 2019இல் ரூ.21.10 லட்சம் கோடியாகவும், மார்ச் 31, 2020இல் ரூ.24.20 லட்சம் கோடியாகவும் மார்ச் 31, 2021இல் ரூ.28.31 லட்சம் கோடியாகவும் உயர்ந்தது. இறுதியில் கடந்த 2022 மார்ச் 31இல் இது ரூ.31.05 லட்சம் கோடியாக உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
நோட்டுகளின் எண்ணிக்கை
புழக்கத்தில் இருக்கும் நோட்டுகளின் மதிப்பு மட்டுமின்றி புழக்கத்தில் உள்ள நோட்டுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.. பணமதிப்பு நீக்க அறிவிப்பின் போது 9 கோடிக்கும் அதிகமான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில் கடந்த மார்ச் 31, 2022 நிலவரப்படி இப்போது அது 13 கோடிக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இப்போது ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக டிஜிட்டல் பொருளாதாரம் அதிகரித்த போதிலும், ரொக்கம் தான் இன்னுமே கூட டாப் இடத்தில் உள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள்
இருப்பினும், பணப் பரிவர்த்தனையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. சில குறிப்பிட்ட பரிவர்த்தனைகளைத் தவிர மற்ற அனைத்திலும் ரொக்கம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் பணத்தைப் பரிமாறும் முறைக்கு நாடு மெல்ல நகர்ந்து வருவதையே இது காட்டுகிறது. எனவே, நமது நாட்டின் பொருளாதார கொள்கைகளை அதற்கேற்ப வடிவமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்துள்ளது.