ராமாயணம், பகவத் கீதையின் இந்துத்துவாவை நம்புகிறேன்! அரவிந்த் கெஜ்ரிவால் கொடுத்த பதிலடி!!
டெல்லி: ‛‛ராமாயணம், பகவத்கீதையில் உள்ள இந்துத்துவாவை நான் நம்புகிறேன். ராமாயணத்திலும், பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது தான் இந்துத்துவா''என பாஜகவை விமர்சிக்கும் வகையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
உத்தர பிரதேசம், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தது.
இதன்மூலம் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி தனது அரசை டெல்லியில் இருந்து பஞ்சாப்புக்கும் விரிவுப்படுத்தி உள்ளது.

தேசிய கட்சியாக ஆம்ஆத்மி
இந்நிலையில் ஆம்ஆத்மி கட்சியை தேசிய கட்சியாக உருவாக்க அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் முயன்று வருகின்றனர். தொடர்ச்சியாக குஜராத், சத்தீஸ்கார் உள்பட பிற மாநில சட்டசபை தேர்தல்களில் ஆம்ஆத்மி கட்சி கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் தான் ஆம்ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜகவின் தலைவர்கள் இடையே கருத்து மோதல்கள் அதிகரித்து வருகின்றன. ‛தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக தலைவர்கள் இடையே வார்த்தை போர் நீடித்து வருகிறது.

கெஜ்ரிவாலிடம் கேள்வி
இந்நிலையில் தான் அரவிந்த் கெஜ்ரிவால் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவை விமர்சனம் செய்தார். இந்த பேட்டியின்போது ‛‛நீங்கள் பாஜகவை இந்துத்துவா, வகுப்புவாத கொள்கை கொண்ட கட்சி என விமர்சிக்கிறீர்களே. அதை எதிர்ப்பீர்களா என அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கேள்வி கேட்கப்பட்டது.

இந்துத்துவாவை நம்புகிறேன்
அதற்கு அரவிந்த் கெஜ்ரிவால், "எனக்கு பாஜகவுடன் சண்டை இல்லை. காங்கிரசுடனும் விரோத போக்கு இல்லை. இந்துத்துவா என்பதற்கு நான் பலமுறை விளக்கம் அளித்துள்ளேன். ராமாயணம், பகவத் கீதையில் உள்ள இந்துத்துவாவை நான் நம்புகிறேன். ராமாயணத்திலும், பகவத்கீதையிலும் எது குறிப்பிடப்பட்டுள்ளதோ அதுவே இந்துத்துவம். ராமாயணத்தில் ராமர் என்ன சொன்னாரோ அதுவே இந்துத்துவம். ராமர் நமக்குள் பகைமையை ஒருபோதும் கற்பிக்கவில்லை. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் பாஜக கட்சியினர் தலித்துக்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். இது தவறான விஷயம்'' என்றார்.

எதிர்க்கட்சிகள் இல்லை
இதையடுத்து, ‛‛பாஜகவின் இந்துத்துவா சரியில்லை என்றால் உத்தரபிரதேசத்தில் எப்படி அந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது'' என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளிக்கையில், "உத்தர பிரதேசத்தில் பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் எதுவும் இல்லை. ஒரே கட்சியாக பாஜக இருந்தால் வெற்றி பெற்றுள்ளது. மக்களும் வேறு வழியில்லை'' என்றார்.

எனக்கும் மோடி தான் பிரதமர்
ஆம்ஆத்மி தேசிய கட்சியாக மாற விரும்புகிறதே என்ற கேள்விக்கு, ‛‛நாட்டில் உள்ள மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். இரண்டு மாநிலங்களில் நேர்மையான முறையில் கட்சியை வளர்த்து வெற்றி பெற்றுள்ளோம். இது தேசிய அளவில் தொடரும்'' என்றார். குஜராத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை குறிவைத்து களம் காண்கிறீர்களா'' என்ற கேள்விக்கு, ‛‛குஜராத் சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. இது பிரதமர் நரேந்திர மோடியை குறிவைத்து நாங்கள் செய்யவில்லை. அவர் தான் எனக்கும் பிரதமர். நம் நாட்டிற்கும் பிரதமராவார்'' என்றார்.












Click it and Unblock the Notifications