தந்தை மறைவுக்கு பின் தாய்க்கே குழந்தைக்கு பெயர் சூட்டும் அதிகாரம்... உச்சநீதிமன்றம் அதிரடி!
டெல்லி : தந்தை மறைவுக்குப் பிறகு குழந்தையின் பெயரை தீர்மானிக்க உரிமை தாய்க்குதான் இருக்கிறது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முதல் கணவரின் மரணத்திற்குப் பிறகு மறுமணம் செய்துகொண்ட தாய்க்கும், குழந்தையின் இறந்த தந்தையின் பெற்றோருக்கும் இடையே குழந்தைக்குச் சூட்டப்பட வேண்டிய குடும்பப்பெயர் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு, தந்தை மறைவுக்குப் பிறகு குழந்தையின் பெயரை தீர்மானிக்க உரிமை தாய்க்குதான் இருக்கிறது என உறுதியுடன் தெரிவித்துள்ளது.

மேலும், அந்த தீர்ப்பில், குழந்தைக்கு இயற்கையான பாதுகாவலர் என்ற முறையில் தாய்க்கே அதிக உரிமை இருக்கிறது. குடும்ப பெயர் ஒரு சமூக அடையாளமாக இருக்கிறது. ஒரு குடும்பத்தின் இதர உறுப்பினர்களுடன் குடும்ப பெயர், தொடர்பை ஏற்படுத்தித் தருகிறது. இதனால் தந்தையின் மறைவுக்குப் பிறகு குழந்தைக்கு தமது குடும்ப பெயரை இணைப்பதில் தாய்க்கு முழு உரிமை இருக்கிறது. குழந்தையின் இயற்கையான பாதுகாவலராக தாயே இருப்பதால், குழந்தையைத் தத்தெடுப்பதற்குக் கொடுக்கவும் உரிமை உண்டு என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
முதல் கணவர் இறந்த பிறகு, குழந்தையின் ஒரே இயற்கையான பாதுகாவலராக தாயே இருப்பதால், குழந்தையை தனது புதிய குடும்பத்தில் சேர்ப்பதிலிருந்தும், குடும்பப் பெயரை தீர்மானிப்பதிலிருந்தும் தாய்க்குகே முழு உரிமை இருக்கும்போது, அதனை எவ்வாறு சட்டப்பூர்வமாக தடுக்கப்பட முடியும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஒரு தாயார் மறுமணம் செய்து கொண்டால், குழந்தைக்கு தனது இரண்டாவது கணவரின் குடும்பப் பெயரை அல்லது குழந்தையைத் தன் கணவனுக்குத் தத்தெடுப்பதில் கூட தாய்க்கே முழு சுதந்திரம் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். தத்தெடுப்பு என்பது ஒரு குழந்தையை பழைய உறவினர்களிடமிருந்து புதியவருக்கு மாற்றுவதைக் குறிக்கிறது.
தத்தெடுக்கப்படும் குழந்தை அனைத்து உரிமைகளையும் இழக்கிறது. குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர்பான அனைத்து கடமைகளையும் இழக்கிறது. எனவே இதுபோன்ற ஒரு விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications