'இன்னும் ஒரே மாதம் தான்.. ஓமிக்ரான் உச்சத்தைத் தொடும், ஆனால்..' கீதா கோபிநாத் கூறிய அதிமுக்கிய தகவல்
டெல்லி: ஓமிக்ரான் கொரோனா குறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத், ஓமிக்ரான் கொரோனா தொடர்பாக சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
உலகின் பல பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. அதேபோல வேக்சின் பணிகளும் சிறப்பாக நடைபெற்று வந்ததால், விரைவில் உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது.
மார்கழி மாத ராசி பலன்கள் 2021: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும்
இந்தச் சூழலில் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா மீண்டும் உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை உலக சுகாதார அமைப்பும் ஆபத்தான கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது.
ஓமிக்ரான் கொரோனா
ஓமிக்ரான் கொரோனா புதிய உருமாறிய கொரோனா என்பதால் உலகின் பல்வேறு ஆய்வாளர்களும் இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகளைச் செய்து வருகின்றனர். முதற்கட்ட ஆய்வுகளில் இது டெல்டா கொரோனாவை காட்டிலும் வேகமாகப் பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பிரிட்டன் நாட்டில் ஓமிக்ரான் கொரோனாவால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பும் பதிவு செய்யப்பட்டது. இது உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
இந்நிலையில், ஓமிக்ரான் கொரோனா தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், "இதுவரை 77 நாடுகளில் ஓமிக்ரான் கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை நாம் பார்த்த உருமாறிய கொரோனா வகைகளைக் காட்டிலும் ஓமிக்ரான் கொரோனா வேகமாகப் பரவுகிறது. இது லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும் என்று மக்கள் நினைப்பது சரியான போக்கு இல்லை. ஓமிக்ரான் லேசான பாதிப்பை ஏற்படுத்தினாலும், அதிக பேருக்குப் பரவும்போது நமது சுகாதார கட்டமைப்பில் கடும் அழுத்தம் ஏற்படக்கூடும்" என்று தெரிவித்தார்,
டிசம்பர் இறுதி
அதேபோல இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜெனோமிக்ஸ் அண்ட் இன்டகிரேடிவ் பயாலஜி நிறுவனத்தின் ஆய்வாளர் டாக்டர் அனுராக் அகர்வால் கூறுகையில், "ஓமிக்ரான் கொரோனா தென் ஆப்பிரிக்காவில் லேசான பாதிப்புகள் மட்டுமே ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்தியாவிலும் இதே நிலை இருக்க வேண்டும். ஆனால் லேசான பாதிப்பு கூட சுகாதார கட்டமைப்பைப் பாதிக்கக்கூடும். சிறப்பான முடிவுகளை நாம் எதிர்பார்க்கும் அதேநேரம் மிக மோசமான ஒன்றுக்கு நாம் தயாராக வேண்டும். டிசம்பர் இறுதிக்குள் ஓமிக்ரான் குறித்துக் கூடுதல் தகவல்களை நம்மால் தெரிந்துகொள்ள முடியும்" என்று குறிப்பிட்டார்.
ஆதிக்கம் செலுத்தலாம்
இதனிடையே சர்வதேச நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் ஓமிக்ரான் குறித்து சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக சிஎன்ன டிவி18 நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "ஓமிக்ரான் கொரோனா அடுத்த மாதம் அதிக ஆதிக்கம் செலுத்தும் கொரோனா வகையாக மாறும் ஆபத்து உள்ளது. அதேநேரம் இது டெல்டா கொரோனா உடன் ஒப்பிடுகையில் லேசான பாதிப்புகளை மட்டுமே ஏற்படுத்துகிறது.
வேக்சின் முக்கியம்
ஓமிக்ரான் கொரோனா வேகமாகப் பரவினால் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். உலகில் உள்ள அனைவரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக கொரோனா வேக்சின் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து உருமாறிய கொரோனா தோன்றிக் கொண்டே தான் இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
கிரிப்டோகரன்சி சிக்கல்
கிரிப்டோகரன்சி சிக்கல் இதற்கிடையில், கிரிப்டோகரன்சி விவகாரம் குறித்து கீதா கோபிநாத் கூறுகையில், "கிரிப்டோகரன்சிகளுக்கு முழுமையான தடையை விதிப்பது கடினம். கிரிப்டோகரன்சியை எப்படிக் கையாள்வது என்பது குறித்து உலகளவில் சில விதிகள் தேவை. கிரிப்டோகரன்சி என்பது இப்போது முக்கிய பிரச்சினை இல்லை. எனவே, தற்போதைய சூழலில் எவ்வித கட்டுப்பாடுகளும் தேவையில்லை" என்று அவர் தெரிவித்தார்
மத்திய அரசு
நாடாளுமன்றத்தில் கிரிப்டோகரன்சி மசோதா தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த குளிர்கால கூட்டத்தொடரில் இது குறித்த மசோதா தாக்கல் ஆகாமல் போக வாய்ப்புள்ளதாக முக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்தவர்களைப் பாதுகாக்க முதலில் சட்டம் கொண்டு வர மத்திய அரசு சிந்தித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.