'ஸ்டிரிட்..'சாட்டையை சுழற்றிய மன்சுக் மாண்டவியா..சுகாதார துறையில் விரைவில் பல மாற்றங்கள்..பரபர தகவல்
டெல்லி: இக்கட்டான சூழ்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மன்சுக் மாண்டவியா, தனது அழுத்தமான நடவடிக்கைகள் மூலம் 10 நாட்களில் தான் முன்னாள் அமைச்சர் ஹர்ஷ் வர்தனை போல இல்லை என்பதைக் காட்டி வருகிறார்.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்துவிட முடியாது. நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு நான்கு லட்சம் வரை சென்றது.
அதேபோல தினசரி உயிரிழப்புகளும் நான்காயிரம் வரை கூட சென்றது. 2ஆம் அலை உச்சத்தில் இருந்த சமயத்தில் நாட்டின் அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பத் தொடங்கின.
தேசிய அரசியலுக்கு மமதா தடாலடி வியூகம்.. தமிழகம் முதல் டெல்லி வரை இன்று வீடியோகான்பரன்ஸில் உரை
2ஆம் அலை
ஒரு புறம் கொரோனாவால் பொதுமக்கள் உயிரிழந்தார்கள் என்றால், மறுபுறம் மருத்துவமனைகளில் படுக்கை, ஆக்சிஜன் சரியான நேரத்தில் கிடைக்காமல் உயிரிழந்தனர். தலைநகர் டெல்லியிலேயே பல வாரங்கள் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவியது. அந்த சமயத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த ஹர்ஷ் வர்தன் கூறிய சில கருத்துக்களும்கூட சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
ஹர்ஷ் வர்தன் ராஜினாமா
கொரோனா 2ஆம் அலையை மத்திய அரசு கையாண்ட விதம் குறித்து எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தது. இதையடுத்து இம்மாத தொடக்கத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்ய்பட்டது. அப்போது கொரோனாவால் கடும் அதிருப்தியைச் சம்பாதித்திருந்த சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக 49 வயதே ஆன மன்சுக் மாண்டவியா சுகாதாரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
புதிய அமைச்சர்
இக்கட்டான சூழ்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மன்சுக் மாண்டவியா, தனது அழுத்தமான நடவடிக்கைகள் மூலம் 10 நாட்களில் தான் முன்னாள் அமைச்சர் ஹர்ஷ் வர்தனை போல இல்லை என்பதைக் காட்டி வருகிறார். சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற முதல் கூட்டத்திலேயே, மூத்த அதிகாரிகளைக் கொண்ட வாட்ஸ்அப் குழு ஒன்றைத் தானே தொடங்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.
ஸ்டிரிட்
அந்தக் கூட்டத்தில் அதிகாரிகள் அனைவரும் முறையாக நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட மன்சுக் மாண்டவியா, தினசரி தான் காலை 9.30-10 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்துவிடுவேன் என்றும் அதிகாரிகளும் அதற்குள் அலுவலகம் வந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்க உள்ளதாகவும் இதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் அமைச்சர் அந்தக் கூட்டத்தில் தெரிவித்தார்.
நம்பிக்கை
அதிகாரிகள் அனைவரும் தங்களுக்கு என டார்கெட் அமைந்து கொண்டு பணியாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக அதிகாரிகளின் செயல்பாட்டை அவ்வப்போது தான் ஆய்வு செய்வேன் என்றும் வார்னிங் செய்துள்ளார் மன்சுக் மாண்டவியா. அவர் அமைச்சராகப் பொறுப்பேற்று 10 நாட்கள் மட்டுமே ஆகியிருந்தாலும்கூட முக்கிய நடவடிக்கையை எடுப்பேன் என்ற நம்பிக்கையை அதிகாரிகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தனர்.
ஹரஷ் வர்தன் போல இல்லை
மன்சுக் மாண்டவியா தலைமையில் இதுவரை நடந்த அனைத்து கூட்டங்கள் மிக ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும் எது குறித்து விவாதிக்க வேண்டுமோ அவை குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஹர்ஷ் வர்தன் அமைச்சராக இருந்த போது, நடைபெறும் மீட்டிங்களில் போலியோ மற்றும் புகையிலை ஒழிப்பு நடவடிக்கைகளில் அவரது பங்களிப்பு குறித்தே அதிகம் பேசுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் கருத்து
புதிய சுகாதாரத் துறை அமைச்சரின் செயல்பாடுகள் குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சுகாதாரத் துறையில் ஒருவர் நினைத்தால் பல்வேறு விஷயங்களைச் செய்யலாம். இல்லையென்றால் சுகாதாரத் துறை என்பது மாநில பட்டியலில் உள்ளது எனக் கூறி ஒதுங்கிக் கொள்ளலாம். புதிய சுகாதாரத் துறை அமைச்சர் அதிரடி நடவடிக்கைகளை எடுப்பார் என்றே நாங்கள் நினைக்கிறோம். பிரதமருக்கு மன்சுக் மாண்டவியா மீது அதி நம்பிக்கை உள்ளது அதை அவர் நிறைவேற்றுவார் என்றே கருதுகிறோம்" என்றார்.
வேக்சின் பற்றாக்குறை
அதேபோல கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை குறித்து மாநில அரசுகள் தொடர்ந்து எழுப்பி வரும் கேள்விக்குப் பதிலடி கொடுத்திருந்த அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநில அரசுகளுக்கு வேக்சின் இருப்பு குறித்து 15 நாட்களுக்கு ஒரு முறை தகவல் அளிக்கப்படுவதாகவும் இருப்பினும் வேக்சின் பற்றாக்குறை எனத் தொடர்ந்து கூறி வருவதால் யாருக்கு என்ன பயன் என விமர்சித்தார். மேலும், வேக்சின் கையிருப்பிற்கு ஏற்றபடி திட்டமிடாதது மாநில அரசுகளின் தவறு தான் என்றும் குற்றஞ்சாட்டினார்.
நம்பிக்கை
இப்படி முதல் 10 நாட்களிலேயே பல அதிரடிகளை நடத்தியுள்ளார் மன்சுக் மாண்டவியா. அவர் பதவியேற்று வெறும் 10 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளதால் அவரது செயல்பாடுகளை இப்போது மதிப்பீடு சரியாக இருக்காது என்றாலும்கூட, வரும் வாரங்களில் சுகாதாரத் துறையில் பல அதிரடி மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்றே அதிகாரிகள் தெரிவித்தனர்.