மோடி ஆட்சியில் 5 லட்சம் கோடி அளவுக்கு வங்கி மோசடி.. ராகுல் காந்தி திடுக் குற்றச்சாட்டு
டெல்லி: நரேந்திர மோடி ஆட்சியில் 5 லட்சம் கோடிக்கும் அதிகமாக வங்கி மோசடி நடந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இன்று சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
தேர்தல் நடைபெறும் நாளன்று பிரதமர் மோடி மீதும் பாஜக மீதும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி புகார் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக பண்டிகையை சிறப்பியுங்கள்.. - ஓட்டு போட மக்களை அழைக்கும் பிரதமர் மோடி!
ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டரில் மோடி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ''மோடி ஆட்சியில் இதுவரை ₹ 5,35,000 கோடி வங்கி மோசடிகள் நடந்துள்ளன. இந்தியாவின் 75 ஆண்டுகளில் மக்களின் பணத்தில் இப்படி ஒரு மோசடி நடந்ததில்லை. இந்திய மக்களுக்கு இது கொள்ளை நாட்கள். இந்த நாட்கள் மோடியின் நண்பர்களுக்கு மட்டுமே நல்ல நாட்கள்.
வங்கி மோசடி
குஜராத் மற்றும் சூரத் நகரில் கப்பல் கட்டுமான தளங்களைக் கொண்டு இயங்கி வருகிறது நிறுவனம் ஏ.பி.ஜி. கடந்த 2019-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் மீது சில வங்கிகள் கடன் மோசடி புகார்களை அளித்தன. அந்தப் புகார்கள் சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சி.பி.ஐ கடந்த 7-ம் தேதி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
சிபிஐ
இந்த நிறுவனங்களில் புகாரைத் தொடர்ந்து தொடர் விசாரணை நடந்தது. அதையடுத்து இதுவரை 28 வங்கிகளில் ரூ.22,842 கோடி அளவுக்கு ஏ.பி.ஜி ஷிப்யார்டு மோசடியில் ஈடுபட்டிருக்கிறது.மற்றும் அதன் இயக்குநர்கள் ரிஷி அகர்வால், சந்தானம் முத்துசாமி மற்றும் அஷ்வினி குமார் ஆகியோருக்கும் இந்த மோசடியில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.
பெரிய மோசடி
இந்தியாவில் இதுவரை நடந்த வங்கி மோசடிகளில் இது மிகப்பெரியது என்று சிபிஐ தெரிவித்துள்ளது. வங்கிகள் எந்த நோக்கத்திற்காகக் கடன் வழங்கியதோ அதைத் தவிர பல வகைகளில் வழங்கப்பட்ட நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது எனவும் சி.பி.ஐ தெரிவித்துள்ளது. ஏ.பி.ஜி ஷிப்யார்டு நிறுவனம் கடன் வாங்கியவங்கிகளின் விவரங்களை சி.பி.ஐ வெளியிட்டிருக்கிறது.