தகுந்த வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு... வீட்டுச் சிறையே போதும்.. உச்ச நீதிமன்றம் கருத்து
டெல்லி: எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவுதம் நவால்காவின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், பொருத்தமான வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவரை வீட்டுக்காவலில் வைக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த 2018, ஜனவரி 1ஆம் தேதி மகாராஷ்டிராவில் புனேவில் அமைந்துள்ள பீமா- கோரேகாவில் போர் வெற்றி நினைவு தினத்தில் திடீரென்று சாதிய ரீதியிலான கலவரம் ஏற்பட்டது. அந்தக் கலவரத்திற்கு, அதற்கு முந்தைய நாள் நடந்த எல்கர் பரிஷத் மாநாட்டு தான் காரணம் எனக் கூறப்பட்டது.
அந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் பொதுமக்களிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாலேயே கலவரம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த வழக்கில் கவுதம் நவால்கா உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்திலும், மும்பை உயர் நீதிமன்றத்திலும் அவர் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து கவுதம் நவால்கா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். என்ஐஏ அதிகாரிகள் பரிந்துரைக்கப்பட்ட 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றும் வீட்டுக்காவலில் இருந்த காலத்தையும் காவலில் இருந்ததாக கருத வேண்டும் என்றும் கவுதம் நவால்கா தரப்பில் வாதிடப்பட்டது.
இருப்பினும், டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, வீட்டுக்காவலில் இருந்த காலத்தையும் காவலில் இருந்ததாக காலமாகக் கருத முடியாது என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார். அதேநேரம் வீட்டுக்காவல் பற்றி சில முக்கியமான கருத்துகளையும் உ்ச நீதிமன்ற நீதிபதி முன் வைத்தார்.
இது குறித்து நீதிபதி கூறுகையில், பொருத்தமான வழக்குகளில் வீட்டுக் காவலுக்கு உத்தரவிட நீதிமன்றங்களால் முடியும். குற்றஞ்சாட்டப்பட்டவரின் வயது, உடல் நிலை, அப்போது நிலவும் சூழ்நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஒருவரை வீட்டுக் காவலில் வைக்கலாம். இதன் மூலம் சிறைகளில் கூட்டம் தவிர்க்கப்படும். சிறைகளுக்கான செலவுகளும் குறையும்" என்றார்.