கொரோனா: இந்தியாவில் புதிதாக 46,148 பேர் பாதிப்பு - ஆயிரத்திற்கும் கீழே குறைந்த மரணங்கள்
இந்தியாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழே குறைந்துள்ளது. கொரோனாவால் ஏற்படும் மரணங்களும் குறைந்து வருவது மக்களிடையே நம்பிக்கை அதிகரித்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றினால் புதிதாக 46,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 58,578 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை
979 ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பு என்பது 50 ஆயிரத்துக்கும் கீழே பதிவாகி வருகிறது.

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் நாடெங்கும் புதிதாக 46,148 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,02,79,331 பேராக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 58,578 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,93,09,607 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் விகிதம் 96.80% ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்திற்கும் மேல் பதிவான நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 979 பேர் மட்டுமே மரணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,96,730 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,72,994 ஆக குறைந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரைக்கும் 32.36 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்று குறைந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications