இலங்கையில் உளவு கப்பல்.. செயற்கைக்கோளை வைத்து பிளான் செய்த இந்தியா.. கண்காணிக்க முடியாமல் ஓடிய சீனா
டெல்லி: இலங்கை கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சீன உளவு கப்பலின் உளவு வேலைகளை இந்தியா தனது 4 செயற்கைக்கோள்கள் மூலம் வெற்றிகரமாக முறியடித்ததால், தற்போது அந்த கப்பல் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது.
ஆசிய கண்டத்தில் இரு பெரும் பொருளாதார நாடுகளான சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் போட்டி நிலவுகின்றன.
அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறும் சீனா, அவ்வப்போது எல்லையிலும் வாலாட்டி வருகிறது. இதற்கு இந்தியாவும் தக்க பதிலடியை கொடுத்து வருகிறது.
இருளில் சத்தமின்றி கிளம்பிய சீன உளவு கப்பல்.. அடுத்து எங்கே செல்கிறது தெரியுமா! பரபர பின்னணி
யுவான் வாங் 5 என்ற கப்பல்
இதுபோக இலங்கையை கைக்குள் போட்டுக்கொண்டு ராணுவ ரீதியாகவும் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க சீனா திட்டம் தீட்டி வருகிறது. இந்த திட்டத்தில் தான், இலங்கையில் உள்ள அம்பந்தோட்டை துறைமுகத்தை சீனா 99 வருட குத்தைக்கு எடுத்துள்ளது. இத்தகைய சூழலில், கடந்த 16 ஆம் தேதி சீனாவுக்கு சொந்தமான ராணுவம் மற்றும் விண்வெளி ஆய்வுக்கப்பலான யுவான் வாங் 5 என்ற கப்பல் இலங்கை அம்பந்தோட்டை துறைமுகத்தில் நிலைநிறுத்தப்பட்டது.
ஏவுகணைகளை ஆய்வு செய்யும் வசதிகள்
முன்னதாக கடந்த 11 ஆம் தேதியே வர இருந்த இந்த கப்பல் இந்தியாவின் எதிர்ப்பால் 5 நாட்கள் கழித்து வந்தது. விண்வெளி ஆய்வு கருவிகள் கொண்ட இந்த கப்பலில் விண்வெளியில் இயங்கும் செயற்கை கோள்களையும், வானில் செலுத்தப்படும் ஏவுகணைகளையும் ஆய்வு செய்யும் வசதிகள் உள்ளன. கப்பல் நங்கூரம் இட்டு இருக்கும் இடத்தில் இருந்து 750 கி.மீ. தொலைவில் உள்ள இடங்களை கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
சீனா கண்காணிக்கக் கூடும்
இந்த தொலைவுக்குள் கல்பாக்கம் அணுமின்நிலையம், கூடங்குளம் அணு மின் நிலையம், ஸ்ரீஹரி கோட்டா ராக்கெட் ஏவுதளம், குலசேகரப்பட்டினம் உள்ளிட்ட இடங்களும் அடங்குகின்றன. இதனால், இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு கட்டமைப்புகள், அணு மின் நிலையங்கள் உள்ளிட்டவற்றை அந்த கப்பல் மூலம் சீனா கண்காணிக்கக் கூடும் என்று அச்சம் எழுந்தது. இதனால், இதை முறியடிக்க இந்தியா திட்டம் தீட்டியது.
அதிநவீன தொழில்நுட்பங்கள்
அதன்படி, சீன உளவு கப்பலில் இருந்து அனுப்பப்படும் சிக்னல்கள் ஜி.சாட் 7 மற்றும் ஜி சாட் 7 ஏ செயற்கைகோள் மூலமாக இடைமறிக்கப்பட்டுள்ளது. சீன உளவு கப்பல்களில் இருந்து வரும் தகவல்களை கண்காணிக்கப்பட்டதோடு, இந்திய பாதுகாப்புத்துறை சார்ந்த தகவல்கள் எதுவும் சேகரிக்கப்பட்டுவிடாமல் தடுப்பதற்காக இரண்டு செயற்கைகோள்களும் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளன. அதேபோல், இந்தியாவின் ரிசாட் மற்றும் எமிசாட் செயற்கை கொள்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
புறப்பட்டு சென்ற சீன கப்பல்
சீனாவின் உளவு கப்பலும் செயற்கை கோள்களை கண்காணிக்கும் திறன் கொண்டது என்பதால், கூடுதலாக இரண்டு செயற்கை கோள்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவின் 4 செயற்கை கோள்கள் சீனாவின் உளவு கப்பலை தொடர்ந்து கண்காணித்து கொண்டே இருந்துள்ளன. இதனால், சீன உளவு கப்பலால் திட்டமிட்ட படி தகவல்களை சேகரிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், திட்டமிட்ட நாளுக்கு முன்பே மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு சீன உளவு கப்பல் புறப்பட்டு சென்றது.