சீனாவுக்கு எதிரான யுத்த களத்தில் மோடியின் தலைமையின் கீழ் வெற்றி பெறுவோம்: அமித்ஷா
டெல்லி: பிரதமர் மோடி தலைமையின் கீழ் கொரோனாவுக்கு எதிரான யுத்த களத்திலும் சீனாவுக்கு எதிரான யுத்த களத்திலும் இந்தியா வெற்றி பெறும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு ஃபேஸ்புக் நேரலை மூலமாக அமித்ஷா அளித்த பேட்டி:
டெல்லியில் ஜூலை 31-ல் 5.5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என துணை முதல்வர் கூறியுள்ளார். ஆனால் அப்படி எல்லாம் கவலைப்பட வேண்டியது இல்லை.
டெல்லியில் கொரோனா பரவுவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெல்லியில் கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை. டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து தரப்பும் இணைந்து செயல்படுகிறோம். அரசியல் விவகாரங்களுக்கு அப்பால் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
லாக் டவுனில் மக்களை உயிர்ப்போடு வைத்திருக்கும் பாரம்பரிய விளையாட்டுக்கள் - மோடி பெருமிதம்
இந்திய நிலவரம் ஓகே
கொரோனாவுக்கு எதிராக மத்திய அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது. ராகுல் காந்திக்கு அறிவுரை எதுவும் வழங்க வேண்டியது இல்லை. அவர்கள் தங்களது கட்சி பணியைத்தான் செய்கின்றனர். உலக நாடுகளை ஒப்பிடுகையில் நமது பாதிப்பு ஓரளவுக்கு பரவாயில்லை என்பதாகவே உள்ளது.
இப்படி பேசலாமா ராகுல்
தேசத்துக்கு எதிரான பரப்புரைகளை எதிர்கொள்ள நமக்கு திராணி இருக்கிறது. ஆனால் ஒரு மிகப் பெரிய கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தியே வலிமிகுந்த விமர்சனங்களை - சரண்டர் மோடி என்பது போல முன்வைக்கிறார். ராகுல் காந்தியும் அவரது கட்சியும் பயன்படுத்துகிற கருத்துகள், ஹேஷ்டேக்குகளை சீனாவும் பாகிஸ்தானும் பயன்படுத்துகின்றன.
என்ன மாதிரியான ஜனநாயகம்?
இந்திரா காந்தி அம்மையாருக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக அந்த குடும்பத்தைத் தவிர வெளிநபர்கள் யாரேனும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்? என்ன மாதிரியான ஜனநாயகம் இது? கொரோனா காலத்தில் நான் எந்த ஒரு அரசியல் நடவடிக்கை- விமர்சனக்களை முன்வைக்க விரும்பவில்லை.
இந்திராவின் எமர்ஜென்சி
இந்திரா காந்தி அம்மையார் கொண்டுவந்த அவசர நிலை பிரகடனத்தை மக்கள் இன்றும் நினைவு கூறுகின்றனர். அது ஜனநாயகத்தின் ஆணிவேர் மீது நிகழ்த்தப்பட்ட பெருந்தாக்குதல். மக்களிடையே இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அது ஒரு கட்சி சார்ந்த பிரச்சனை அல்ல. தேசத்தின் ஜனநாயகம் சார்ந்த பிரச்சனை. பிரதமர் மோடி தலைமையில் கொரோனா களத்திலும் எல்லை பிரச்சனையிலும் நிச்சயம் நாம் வெல்வோம்.
Recommended Video
லாக்டவுன் நடவடிக்கைகள்
கொரோனா லாக்டவுன் காலத்தில் வருந்தத்தக்க நிகழ்வுகள் நிகழ்ந்தன. பொறுமை இழந்தவர்கள் சாலைகளில் நடந்தார்கள். அது எங்களுக்கும் வலியைத்தான் தந்தது. இதனையடுத்து இடம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார் பிரதமர் மோடி. இதுவரை 1கோடியே 20 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர்.
இவ்வாறு அமித்ஷா கூறினார்.