இந்தியா தாக்குதல் நடத்தாது.. அமைதி, நல்லிணக்கத்தை சீர்குலைத்தால் பதிலடிதான்..ராஜ்நாத்சிங் வார்னிங்
டெல்லி: இந்தியா எந்த ஒரு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தாது; ஆனால் இந்தியாவின் அமைதி, நல்லிணக்கத்தை சீர்குலைத்தால் தக்க பதிலடி தருவோம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாருதி வீர் ஜவான் டிரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தியாகிகளுக்கான கவுரவம் என்ற பொருள்படும் 'ஷாஹீதோன் கோ சலாம்' நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத்சிங் பேசியதாவது: ஆயுதப்படை வீரர்கள் பிராந்தியம், மதம், சாதி மற்றும் மொழி ஆகியவற்றின் தடைகளைத்தாண்டி மேன்மை அடைந்து வருகின்றனர்.
எமெர்ஜென்சி காலத்தில் ஜனநாயகம் காக்க போராடிய முக்கிய படைவீரர் முலாயம் சிங் - பிரதமர் மோடி இரங்கல்
குடிமக்கள் கடமை
தாய்நாட்டிற்கு தன்னலமின்றி சேவை செய்து, பல்வேறு அச்சுறுத்தல்களில் இருந்து மக்களைக் காப்பாற்றுங்கள், அதே போல் நமது புரட்சிகர சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்தியாவின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்தனர். நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் வீரர்களின் இலட்சியங்களையும், தீர்மானங்களையும் முன்னெடுத்துச் செல்வது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
புதிய இந்தியா
நமது தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாத்து, வலிமையான, வளமான மற்றும் தன்னம்பிக்கையான 'புதிய இந்தியாவை' உருவாக்குவதில் தங்கள் பங்கை ஆற்றுங்கள். வீரமிக்க சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் ஆயுதப்படை வீரர்களுக்கு மரியாதை செய்யும் நோக்கில், நாட்டைக் காப்பதில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆதரவளிப்பது ஒரு தேசியப் பொறுப்பாகக் கருதுகிறோம். சேவையில் இருப்பவர்கள் மற்றும் ஓய்வுபெற்ற பணியாளர்களின் அடுத்த உறவினர்களின் நலனுக்காக அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
ராணுவ வீரர்கள் குடும்பம்
நான் உள்துறை அமைச்சராக இருந்தபோது, மத்திய ஆயுதப்படை (சிஏபிஎஃப்) ஜவான்கள் மற்றும் அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளில் 'பாரத் கீ வீர்' நிதியும் ஒன்றாகும். சமீபத்தில், பாதுகாப்பு அமைச்சகம் 'மா பாரதி கே சபூத்' என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியது. வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பதை கருத்தில் கொண்டு நிதி ஆதார நடவடிக்கைகளில் மக்கள் அதிக பங்களிப்பை வழங்க முடியும்.
பதிலடிதான் கிடைக்கும்
ஆயுதப் படைகளுக்கு உள்நாட்டு அதிநவீன ஆயுதங்களை வழங்கி, பாதுகாப்புத்துறையை வலுப்படுத்துவதற்கே முன்னுரிமை; அனைத்து அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள நாடு தயாராக உள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் விரைவில் முழுமையான தற்சார்பு அடையும். இந்தியா அமைதியை விரும்பும் தேசம், எந்த நாட்டையும் தாக்குவது தொடர்பான நடவடிக்கைக்ளில் ஈடுபடாது. ஆனால் நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சித்தால், தகுந்த பதிலடி கொடுக்கப்படும். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.