122 வருடங்களில் இல்லாத வெப்பநிலை.. இந்தியாவில் புதிய ரெக்கார்ட் படைத்தது வெயில்.. பரபரப்பு தகவல்!
டெல்லி: இந்தியாவில் 9 மாநிலங்களில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு கடும் வெப்பநிலை பதிவாகி உள்ளது. 9 மாநிலங்களில் கடந்த 122 வருடங்களில் ஏப்ரல் மாதங்களில் இல்லாத அளவிற்கு கடந்த ஏப்ரல் மாதம் வெப்பநிலை பதிவாகி உள்ளது.
நாடு முழுக்க வெயில் வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக வெப்ப காற்றும் வடமாநிலங்களில் வீசி வருகிறது. இந்த நிலையில்தான் இந்தியாவில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்வதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
வாட்டிவதைக்க போகும் வெயில்! 3 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகுமாம்! கவனமா இருங்க மக்களே!
இந்திய வானிலை
இந்திய வானிலை மைய அறிவிப்பின்படி, இந்தியாவில் 9 மாநிலங்களில் கடந்த 122 வருடங்களில் இல்லாத அளவிற்கு வெப்பநிலை பதிவாகி உள்ளது. வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் 35.9 டிகிரி செல்ஸியஸ் முதல் 37.78 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானாவில் வெப்பநிலை மிக அதிகமாக பதிவாகி இருக்கிறது. மத்திய இந்தியாவில் ஏப்ரல் மாதம் சராசரியாக 37.78 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.
வெப்பநிலை
வடமேற்கு இந்தியாவில் 35.9 டிகிரி செல்ஸியஸ் பதிவாகி உள்ளது. இது சராசரி அளவை விட 3.35 டிகிரி செல்சியா அதிகம் ஆகும். ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், லடாக், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இந்தத் ஏப்ரல் மாதத்தில் பதிவான வெப்பநிலைதான் கடந்த 122 வருடங்களில் பதிவான மிக அதிக வெப்பநிலை ஆகும்.
வெப்ப காற்று
இந்தியா முழுக்க சராசரியாக 35.05 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. கடந்த 122 வருடங்களில் இது நான்காவது மிக அதிக தேசிய வெப்பநிலை ஆகும். இரவு நேரங்களில் வடஇந்தியா முழுக்க வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும், தென் மாநிலங்களில் ஒப்பீட்டளவில் குறைந்த வெப்பநிலை இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெயில் எவ்வளவு
ஆனால் அதே சமயம் மே மாதம் எதிர்பார்த்ததை விட கூடுதல் மழை இருக்கும். மே மாதத்தில் பெய்ய கூடிய மழையை விட சராசரியாக இங்கு கூடுதல் மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் வடகிழக்கு, தென் கிழக்கு தீபகற்பத்தில் குறைவாக மழை இருக்கும். மார்ச் மாதம் வடகிழக்கு மாநிலங்களில் 89 சதவிகித மழை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வடமேற்கு மாநிலங்கள்
கடந்த ஏப்ரல் மாதம் இது 83 சதவிகிதமாக இருந்தது. இந்த மாதத்தில் மேலும் சில நாட்கள் வடமேற்கு, மத்திய இந்தியாவில் கடுமையான வெப்பக்காற்று வீசும், வெப்பநிலை மேலும் உயரும். இதற்கு முன் இந்தியாவில் 1973, 2010, 2016 ஆகிய ஆண்டுகளில் ஏப்ரல் மாதங்களில் மிக அதிக வெப்பநிலை பதிவானது. 2022 அந்த லிஸ்டில் சேர்ந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.