சிங்கப்பூர் வைரஸ்: கெஜ்ரிவால் கூறியது இந்தியாவின் கருத்தல்ல.. சிங்கப்பூருக்கு, ஜெய்சங்கர் விளக்கம்
டெல்லி: சிங்கப்பூர் வைரஸ் என்று அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா சார்பாக பேசவில்லை என சிங்கப்பூருக்கு, இந்திய வெளியுவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.
முன்னதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிங்கப்பூர் அரசு கண்டனம் தெரிவித்து இருந்தது.
கேரள மாநில புதிய அமைச்சரவை.. கடந்த முறை 2.. இந்த முறை 3 பெண்களுக்கு வாய்ப்பு
சிங்கப்பூரில் புதிய திரிபு வைரஸ் பரவி வருவதாகவும், இது குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்றும் மற்ற நாடுகளுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் வந்தன.
கெஜ்ரிவால் கருத்து
இந்த வைரஸ் தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 'சிங்கப்பூரில் கண்டறியப்பட்ட கொரோனாவின் புதிய வடிவம் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இது மூன்றாவது அலையாக வரக்கூடும் என்றும் கூறுகிறார்கள். எனவே மத்திய அரசு சிங்கப்பூரில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.
சிங்கப்பூர் கண்டனம்
கெஜ்ரிவாலின் இந்த கருத்துக்கு சிங்கப்பூர் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்திய தூதரை வரவழைத்த சிங்கப்பூர் வெளியுறவுத்துறை, ' கொரோனா திரிபு தொடர்பாக டெல்லி முதல்வரின் கருத்து தகுதியற்றது'' என்று கண்டனத்தை பதிவு செய்தது. 'சிங்கப்பூர் வைரஸ் என்று ஒன்று இல்லை. அரசியல்வாதிகள் உண்மை அறிந்து பேச வேண்டும்' என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஜெய்சங்கர் விளக்கம்
இவ்வாறு பிரச்சினை பூதகரமாக உருவெடுக்க இந்தியா தனது கருத்தை தெரிவித்தது. ''டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் கருத்து இந்தியாவின் கருத்து அல்ல. அவர் இந்தியா சார்பாக பேசவில்லை'' என இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், சிங்கப்பூருக்கு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
இந்தியா சார்பில் பேசவில்லை
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூரும், இந்தியாவும் கூட்டாளிகளாக இருந்து வருகின்றன. ஒரு தளவாட மையமாகவும், ஆக்ஸிஜன் விநியோகம் செய்பவையாகவும் சிங்கப்பூரின் பங்கு பாராட்டுக்குரியது. அதே வேளையில் சில நபர்களிடம்(கெஜ்ரிவால்) இருந்து வரும் கருத்துக்கள் இரு நாடுகளின் நீண்ட கால உறவை பாதிக்கலாம். இருப்பினும் நான் தெளிப்படுத்துகிறேன். டெல்லி முதல்வர் இந்தியா சார்பாக பேசவில்லை என்று ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.
சிங்கப்பூர் அமைச்சர் நன்றி
இதனை தொடர்ந்து ஜெய்சங்கரின் விளக்கத்தை ஏற்றுக் கொண்ட சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் அவர் டுவிட்டரில் கூறுகையில், ' நமது நாடுகளில் தற்போதுள்ள நிலைமையை தீர்ப்பதில் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து கவனம் செலுத்துவோம்' என்று கூறினார்.