உச்சமடையும் விவசாயிகள் போராட்டம்... நிலைமையை கட்டுப்படுத்த... 48 மணி நேரம் இணைய சேவை முடக்கம்
டெல்லி: விவசாயிகள் போராட்டம் உச்சமடைந்துள்ள டெல்லி எல்லையிலுள்ள சிங்கு, காசிப்பூர் மற்றும் திக்ரி ஆகிய பகுதிகளில் இரண்டு நாட்கள் இணையச் சேவை முடக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லியின் மூன்று முக்கிய நுழைவாயில்களான சிங்கு, காசிப்பூர் மற்றும் திக்ரி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, குடியரசு தின டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட குழப்பத்திற்குப் பிறகு, நூற்றுக்கணக்கான விவசாயிகள் போராட்ட களத்தை நோக்கிப் படையெடுத்துள்ளனர்.
இணையச் சேவை முடக்கம்
இந்நிலையில், நிலைமை மோசமாவதைத் தவிர்க்க சிங்கு, காசிப்பூர் மற்றும் திக்ரி ஆகிய பகுதிகளில் நேற்றிரவு 11 மணி முதல் இரண்டு நாட்களுக்கு இணையச் சேவை முடக்கவுதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி நாளை இரவு 11 மணி வரை போராடும் நடைபெறும் இடங்களில் இணையச் சேவை துண்டிக்கப்படுகிறது. முன்னதாக, ஹரியானா அரசு 17 மாநிலங்களில் இன்று மாலை ஐந்து மணி வரை இணையச் சேவையை முடக்கி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
டிராக்டர் பேரணி
முன்னதாக, விவசாய சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி குடியரசு தினத்தன்று விவசாயிகள் மாபெரும் பேரணியை நடத்தினர். அதில் யாரும் எதிர்பாராத வகையில் வன்முறை ஏற்பட்டது. டிராக்டர் கவிழ்ந்து ஒரு விவசாயி உயிரிழந்தார். மேலும், 70க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர். விவசாய போராட்டத்தில் சிலர் ஊடுருவி இந்த வன்முறையை நிகழ்த்தியதாக விவசாய தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கண்ணீர்விட்ட விவசாயச் சங்க தலைவர்
இந்த வன்முறையை அடுத்து காசிப்பூரில் போராடி வரும் விவசாயிகள் உடனடியாக அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்று உபி அரசு உத்தரவிட்டது. விவசாய சட்டங்கள் திரும்பப் பெறும் வரை போராட்டத்தைக் கைவிட முடியாது என்றும் துப்பாக்கிச் சூட்டையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாகவும் விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்திருந்தார். மேலும், விவசாயிகளுக்கு அரசு துரோகம் இழைத்துவிட்டதாகவும் கூறி அவர் கண்ணீர் விட்டார். மூத்த விவசாயச் சங்க தலைவர் ஒருவரைக் கண்ணீர் விடும் நிலைக்கு மத்திய அரசு தள்ளியதாகக் கூறி, ஹரியானா மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லி எல்லையை நோக்கி முற்றுகையிடத் தொடங்கினார்.
பலத்த பாதுகாப்பு
இதையடுத்து எல்லையில் பதற்றம் அதிகரித்தது. காசிப்பூர் எல்லையில் விவசாயிகளின் போராட்ட களத்திற்கு மின்சாரம் மற்றும் குடிநீர் சேவையை உத்தரப் பிரதேச அரசு தற்காலிகமாக நிறுத்தியது. காசிப்பூர் எல்லையில் டெல்லி போலீசாருடன் சிஏபிஎஃப், பிஏசி உள்ளிட்டோரும் தற்போது பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல சிங்கு மற்றும் திக்ரி பகுதிகளிலும் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு டெல்லி போலீஸ் அனுப்பிய நோட்டீசுக்கு அவர்கள் பதிலளித்தவுடனேயே என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.