நாட்டில் பட்டினிச் சாவுகளே இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள்...மத்திய அரசை கேட்ட சுப்ரீம் கோர்ட்
நாட்டில் பட்டினி சாவுகள் எதுவுமே இல்லையா என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லி: நாட்டில் பட்டினி சாவுகள் எதுவுமே இல்லையா என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மத்திய அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் பட்டினிச்சாவு இல்லை என்று எப்படி கூற முடியும் என்று கேட்ட நீதிபதி, பட்டினி சாவுகள் குறித்த அறிக்கைகளை மாநில அரசுகளிடம் இருந்து பெற்று அதனை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
நாடு முழுவதும் பட்டினிச்சாவு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளை முற்றிலுமாக அகற்றும் வகையில் சமுதாய உணவகங்களை அமைக்க மத்திய மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பட்டினிச்சாவுகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் கூறினார்.
கூண்டில் அடைத்த போது விபரீதம்! வண்டலூர் பூங்காவில் பெண் சிறுத்தை உயிரிழப்பு!
மாநில அரசுகளின் தரவுகள்
பிரமாணப் பத்திரத்தில் இடம்பெற்றுள்ள பட்டினிச்சாவுகள் குறித்த தரவுகள் குறித்து தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியபோது எந்த ஒரு மாநிலத்திலும் பட்டினிச்சாவுகள் ஏற்பட்டிருப்பதை மாநில அரசுகள் சுட்டிக் காட்டவில்லை எனவும் தலைமை வழக்கறிஞர் பதிலளித்தார். அப்படி என்றால் நாட்டில் பட்டினிச் சாவுகளே இல்லை என்று சொல்கிறீர்களா என தலைமை நீதிபதி மீண்டும் கேள்வி எழுப்பினார்.
பட்டினி சாவு மரணம்
அதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், தமிழகத்தில் 5 வயது சிறுவன் பட்டினியால் உயிரிழந்ததாக செய்தித்தாள்களில் செய்திகள் வெளியாகியிருந்தது. எனவே அது மட்டும் தான் தற்போது உள்ளது என கூறினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த போது நடைபெற்ற உடற்கூறாய்வில் சிறுவனின் குடலில் உணவு இல்லாததால் பட்டினிச்சாவு என அழைக்கப்பட்டது என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் பதில் அளித்தார்.
நிதி செலவு
யுனிசெப் அமைப்பின் அறிக்கையின்படி ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் அளவு சீனாவை விட இந்திய குழந்தைகளிடம் ஐந்து மடங்கு அதிகமாக இருப்பதாக கூறியுள்ளது. மத்திய அரசு 130க்கும் அதிகமான உணவு சம்பந்தமான திட்டங்களில் ஏராளமான நிதியை செலவு செய்து வருவதாகக் கூறினார்.
சமுதாய உணவகங்கள்
பட்டினிச் சாவுகள் குறித்த சமீபத்திய விரிவான அறிக்கைகளை ஏன் மத்திய அரசு தாக்கல் செய்ய கூடாது என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியபோது, சம்பந்தப்பட்ட அமைச்சகம் 22 மாநிலங்களுடன் இரண்டு முறை ஆலோசனை கூட்டத்தை நடத்தி இருப்பதாக கூறினார். ஒடிசா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, பஞ்சாப், மேற்கு வங்கம், உள்ளிட்ட மாநிலங்கள் சமுதாய உணவகங்களை நடத்தி வருவதாகவும் அதற்கு தேவையான நிதியினை மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற்று வருவதாகவும் கூறினார்.
அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
அப்போது பேசிய தலைமை நீதிபதி தற்பொழுது இந்த விவகாரத்தில் எந்த ஒரு திட்டத்தையும் தாங்கள் உருவாக்கப் போவதில்லை என்றும் பட்டினிச்சாவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக இன்னும் சில முக்கியமான தரவுகளை நாங்கள் மத்திய அரசிடம் இருந்து எதிர்பார்ப்பதாக கூறினார். மேலும் இந்த பொதுநல மனுவை ஒரு விளம்பரத்திற்கான மனுவாக நிச்சயமாக மத்திய அரசு கருதக்கூடாது என்றும் நாட்டில் பட்டினிச் சாவு இல்லை என்று கூறுகிறீர்கள். ஆனால் 5 வயது சிறுவன் பட்டினியால் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. எனவே இது சம்பந்தமான விரிவான அறிக்கை தேவைப்படுகிறது.
விசாரணை ஒத்திவைப்பு
சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் இருந்து அறிக்கைகளைப் பெற்று அதனை தாக்கல் செய்யுங்கள் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைப்பதாகவும் அதற்குள் மத்திய மாநில அரசுகள் இந்த விவகாரம் தொடர்பாக கூடுதலான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.