மசூதிகளில் பெண்கள் தொழுகை நடத்தலாம்.. ஆண்களுடன் சேர்ந்து நடத்த முடியாது: முஸ்லிம் தனிநபர் வாரியம்
மசூதிகளில் பெண்கள் தொழுகை நடத்த அனுமதி உண்டு என்கிறது முஸ்லிம் தனிநபர் வாரியம்.
டெல்லி: மசூதிகளில் பெண்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் வாரியம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் ஆண்களுடன் இணைந்து மசூதிகளில் தொழுகை நடத்த முடியாது எனவும் முஸ்லிம் தனிநபர் வாரியம் குறிப்பிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஒரு பொதுநலன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. பர்ஹா அன்வர் ஹூசைன் ஷேக் என்பவர் இந்த பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இதில், முஸ்லிம் பெண்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது. முஸ்லிம் பெண்கள், மசூதிகளில் நுழையவும் தொழுகை நடத்தவும் அனுமதி மறுக்கப்படுகிறது. இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான இந்த நடைமுறையை நீக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இவ்வழக்கின் விசாரணை அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த வழக்கில் முஸ்லிம் தனிநபர் வாரியமானது ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது.
முஸ்லிம் தனிநபர் வாரியத்தின் மனுவில், மசூதிகளில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பெண்களுக்கு மசூதிகளில் உரிமை, வசதிகள் வழங்கப்படுகிறது. பெண்கள் விரும்பினால் மசூதிக்குள் நுழைந்து தொழுகை நடத்தலாம். முஸ்லிம் தனிநபர் வாரியம் என்பது அரசு அதிகார்ம் இல்லாத அமைப்பு. இஸ்லாமிய கொள்கை ரீதியாக சில ஆலோசனைகளைத்தான் தனிநபர் வாரியம் வழங்குகிறது.

இஸ்லாமானது ஆண்களுக்கான தொழுகை வழிபாட்டு நெறிமுறைகளை கட்டாயப்படுத்திய போல் பெண்களுக்கு கட்டாயப்படுத்தவில்லை. பெண்கள் வீட்டில் அல்லது மசூதியில் தொழுகை நடத்தலாம். மெதீனாவில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக தொழுகை நடத்த அனுமதிக்கப்படுகின்றனர். அதேநேரத்தில் ஆண்கள், பெண்கள் இணைந்து ஒரே இடத்தில் தொழுகை நடத்த இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இவ்வாறு முஸ்லிம் தனிநபர் வாரியம் தமது மனுவில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications