ஆப்கானில் இன்னும் எத்தனை இந்தியர்கள் இருக்கின்றனர் என்ற விவரம் தெரியவில்லை.. மத்திய அரசு சொல்கிறது!
டெல்லி: ஆப்கானிஸ்தானில் இன்னும் எத்தனை இந்தியர்கள் இருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை என்றும் இந்தியா திரும்ப விரும்பும் பெரும்பாலான இந்தியர்கள் அங்கு இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் அங்கு தொடர்ந்து பெரும் பதற்றம் நிலவி வருகிறது. தாலிபான்களின் அடக்குமுறைக்கு பயந்து ஆப்கான் நாட்டினர் அங்கு இருந்து வெளியேறி வேறு நாடுகளில் அடைக்கலம் புகுந்து வருகின்றனர்.
ஆப்கானில் இருந்து வெளியேறும் மக்கள் அனைவரும் காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.
காபூல் விமான நிலையத்திற்கு வருபவர்கள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக அமெரிக்க படைகள் மற்றும் நேட்டோ கூட்டாளிகள் அங்கு பாதுகாப்புக்கு இருக்கின்றன.

காபூல் விமான நிலையம்
பலர் முண்டியடித்து வருவதால் மக்களை வெளியேற்றுவதில் அமெரிக்க படைகளுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. இதற்கிடையே நேற்று காபூல் விமான நிலையம் அருகே குண்டு வெடித்து 60-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவும் ஆப்கானில் உள்ள இந்திய மக்களை மீட்டு வருகிறது. இந்திய விமானப்படை (IAF) துஷன்பே, தஜிகிஸ்தான் மற்றும் கத்தார் வழித்தடங்கள் வழியாக இந்திய மக்களை அழைத்து வருகிறது.

விவரம் தெரியவில்லை
இந்த நிலையில் காபூலில் இன்னும் எத்தனை இந்தியர்கள் இருக்கிறார்கள்? என்ற விவரம் தெரியவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது:- ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. ஆனால் எண்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. எங்கள் ஒட்டுமொத்த மதிப்பீடு என்னவென்றால், திரும்ப விரும்பும் பெரும்பாலான இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் ஆப்கானிஸ்தானில் இருக்க வாய்ப்புள்ளது. அதற்கான சரியான விவரம் என்னிடம் இல்லை.

கண்காணித்து வருகிறோம்
நாங்கள் நிலைமையை மிகவும் கவனமாக கண்காணித்து வருகிறோம். இது வளர்ந்து வரும் சூழ்நிலையாகும். அமெரிக்கா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஒருங்கிணைந்து இந்தியர்களை மீட்டு வருகிறோம். தஜிகிஸ்தானில் உள்ள துஷான்பே விமான நிலையம் இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது, அதே நேரத்தில் உஸ்பெகிஸ்தான் மற்றும் ஈரானின் வான்வெளி இந்தியாவிற்கு திறக்கப்பட்டது.

இந்தியர்களுக்கு முன்னுரிமை
ஆப்கானில் இருந்து வெளியேறுபவர்களில் முதலில் இந்தியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறோம். ஆப்கான் மக்களும் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகிறார்கள். ஆப்கான் அகதிகளுக்காக மத்திய உள்துறை அமைச்சகம் ஆறு மாத அவசர மின் விசாக்களை அறிவித்துள்ளது. மொத்தத்தில் இந்தியா திரும்ப விரும்பும் பெரும்பாலான இந்திய குடிமக்கள் வெளியேற்றப்பட்டனர் என்று வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறினார்.












Click it and Unblock the Notifications