அமைதிக்கான நோபலுக்கு டஃப் தரும் மோடி? தீயாக பரவிய தகவல்! நோபல் கமிட்டி உறுப்பினரே தந்த பரபர விளக்கம்
நோபல் பரிசு கமிட்டியின் துணைத் தலைவர் அஸ்லே டோஜே இப்போது இந்தியா வந்துள்ளார்.
டெல்லி: அமைதிக்கான நோபல் பரிசுக்கு மிகப் பெரிய போட்டியாளராகப் பிரதமர் மோடி இருப்பதாக நோபல் பரிசு கமிட்டியின் துணைத் தலைவர் அஸ்லே டோஜே கூறியதாகத் தகவல் பரவியது. இதனிடையே இது குறித்து அவர் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படுகிறது. அதில் குறிப்பாக அமைதிக்கான நோபல் பரிசு பலரும் கவனிக்கும் ஒன்றாகவே இருக்கிறது.
இந்தியாவில் இருந்து கைலாஷ் சத்யார்த்திக்கு கடந்த 2014இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இது கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு
ஒபாமா முதல் பல அரசியல் தலைவர்களும் நோபல் பரிசுகளைப் பெற்றுள்ளனர். இந்தாண்டு நோபல் பரிசு குறித்த அறிவிப்பிற்குப் பல மாதங்கள் இருக்கிறது என்ற போதிலும், அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்து இப்போதே விவாதம் கிளம்பியுள்ளது. நோபல் பரிசு கமிட்டியின் துணைத் தலைவர் அஸ்லே டோஜே இந்தியா வந்துள்ள நிலையில், நேற்று அவரது பேசியதாக ஒரு கருத்து இணையத்தில் வேகமாகப் பரவியது. பல்வேறு ஊடகங்களும் அந்த செய்தியை வெளியிட்டது.

பரவிய தகவல்
அதாவது, அமைதிக்கான நோபல் பரிசுக்கு மிகப் பெரிய போட்டியாளராகப் பிரதமர் மோடி இருப்பதாகவும் அமைதியை நிலைநாட்டக்கூடிய நம்பிக்கைக்குரிய தலைவராக மோடி இருப்பார் என்றும் அவர் கூறியதாகத் தகவல் பரவியது. மேலும், உலகில் அமைதியின் நம்பகமான முகமாக மோடி உள்ளதாகவும் போரிடும் நாடுகளுக்கு இடையே போரைத் தடுத்து அமைதியை நிலைநாட்டும் திறன் கொண்ட நம்பகமான தலைவராக மோடி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டதாக இணையத்தில் தகவல்கள் பரவின.

மறுப்பு
பல ஊடகங்களும் இந்த செய்திகளை வெளியிட்டதால், பலரும் இதை உண்மை என்றே நம்பினர். இதனிடையே இந்தத் தகவலை முற்றிலுமாக மறுத்துள்ள நோபல் கமிட்டியின் துணைத் தலைவர் அஸ்லே டோஜே, இது முற்றிலும் பொய்யானது என்றும் இந்த பொய்யான தகவல் எப்படிப் பரவியது என்றே தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தனது இந்தியப் பயணத்தின் நோக்கம் குறித்துப் பேசிய அவர், "நான் நார்வே நோபல் கமிட்டியின் துணைத் தலைவராக இந்தியாவுக்கு வரவில்லை.. சர்வதேச அமைதி மற்றும் புரிதலுக்கான இயக்குநராகவும், இந்தியாவின் நண்பராகவும் இங்கு வந்து இருக்கிறேன்" என்றார்.

பாராட்டு
அதேநேரம் ரஷ்ய அதிபரிடம், "இது போருக்கான யுகம் இல்லை" பிரதமர் மோடி கூறியதைக் குறிப்பிட்டு டோஜே பிரதமரைப் புகழ்ந்தே பேசினார். அவர் மேலும் பேசுகையில், இது போருக்கான யுகம் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியது நம்பிக்கையின் வெளிப்பாடு. இன்று உலகப் பிரச்சனைகளை நாம் போர் மூலம் தீர்க்க முற்படக் கூடாது என்பதையே இந்தியா கூறியுள்ளது. பிரதமர் மோடிக்கு மதிப்பு உள்ளது. உலகின் பெரும்பான்மையான மக்கள் இந்த விவகாரத்தில் அவருக்குப் பின்னால் தான் உள்ளனர்.

உக்ரைன் விவகாரம்
உக்ரைனில் நடக்கும் போர் என்பது உலக நாடுகளுக்கே ஒரு சோகம். இது முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டிய போர். அனைத்து நாடுகளும் இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர முயல வேண்டும்.. அணு ஆயுதங்களின் பயன்பாட்டால் எந்தளவுக்குப் பேரழிவு ஏற்படும் என்பதை நினைவுபடுத்தும் வகையிலேயே இந்தியாவின் கருத்து இருக்கிறது. இந்த விவகாரத்தில் இந்தியா உரத்த குரலில் பேசவில்லை, யாரையும் அச்சுறுத்தவில்லை.. நட்பு ரீதியாகத் தனது கருத்தைத் தெரிவித்தது. உலகின் முதன்மையான சக்திகளில் இந்தியாவும் ஒன்று என்பதால் சர்வதேச அரசியலில் நமக்கு இந்தியா அதிகம் தேவை" என்றார்.

பிரதமர் மோடி
கடந்த 2018ஆம் ஆண்டு பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி பரிசு வழங்கப்பட்டது. சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவது, இந்திய மக்களின் திறன் மேம்பாட்டினைத் துரிதப்படுத்துவது, ஊழல் ஒழிப்பு, ஜனநாயகத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட காரணங்களுக்காகப் பரிசு வழங்கப்படுவதாக சியோல் அமைதி குழு கூறியிருந்தது. இந்தச் சூழலில் தான் அமைதிக்கான நோபல் பரிசிலும் அவர் முக்கிய போட்டியாளராக உள்ளதாகத் தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications