டேக் டைவர்ஷன்.. சீனாவை தவிர்த்து இந்தியாவுக்கு வரும் ஆப்பிள்.. அதிகரிக்கும் உற்பத்தி.. குட்நியூஸ்!
டெல்லி: அமெரிக்கா-சீனா மோதல் போக்கு காரணமாக ஏற்கெனவே ஐபோன் 14 உற்பத்தியை இந்தியாவில் தொடங்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
இந்நிலையல் தற்போது ஏர்பாட் உற்பத்தியையும் இந்தியாவில் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளனர்.
மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கிடைக்கும் மலிவான உழைப்பு சக்தி, சலுகைகள் உள்ளிட்ட காரணங்களுக்காக ஆப்பிள் நிறுவனம் இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படிப்பட்டவரா? வெளியேற்றக் கூறி கோரிக்கை வைத்த பெண்கள் ஆணையம்!!
முதலீடு
உலகின் மிகவும் பலம் வாய்ந்த பொருளாதார நாடுகளாக உள்ள அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான உரசல்கள் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் சீனாவில் முதலீடு செய்வதை பல சர்வதேச நிறுவனங்கள் தொடர்ந்து தவிர்த்து வருகின்றன. மேலும், சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் விநியோக மற்றும் உற்பத்தி சங்கிலையை பாதித்துள்ளது. இதன் காரணாமாகவும் பல நிறுவனங்கள் சீனாவை தவிர வேறு பல நாடுகளில் முதலீடு செய்ய முயன்று வருகின்றன.
கட்டுப்பாடுகள்
குறிப்பாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 14-ஐ சீனாவில் தயாரிக்காமல் இந்தியாவில் தயாரிக்க இருப்பதாக அறிவித்தது. கடந்த 2019ம் ஆண்டில் தொடங்கிய கொரோனா தொற்று சீனாவில்தான் உருவானது என்று சொல்லப்பட்டாலும் அங்கு இதுவரை வெறும் 5,226 பேர்தான் உயிரிழந்துள்ளனர். அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இதற்கு காரணம். ஆனால் இந்தியாவில் இந்த உயிரிழப்புகள் 5 லட்சத்திற்கும் அதிகம். அமெரிக்காவில் 10 லட்சத்திற்கு அதிகம்.
உற்பத்தி
சீனாவில் பலரின் உயிரை காப்பாற்றிய இந்த கட்டுப்பாடுகள் மறுபுறத்தில் உற்பத்தி திறனை கடுமையாக பாதித்துள்ளது. எனவே ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14ஐ தொடர்ந்து ஏர்பாட் உற்பத்தியையும் இந்தியாவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே ஐபோன் 13 இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலிருந்து ஐபோன் ஏற்றுமதி ஏற்கெனவே 1 பில்லியன் டாலர்களை கடந்துள்ளதாகவும், அடுத்து வரும் காலங்களில் இது 2.5 பில்லியனை எட்டும் என்று 'புளும்பெர்க்' நிறுவனம் கணித்துள்ளது.
சீனாவுக்கு மாற்று
என்னதான் இந்தியா பெருமையாக பேசினாலும் அது சீனாவின் அளவுக்கு உற்பத்தியை எட்டவில்லை. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை 98% எண்ணிக்கையை தற்போது வரை சீனாதான் தயாரித்து தந்திருக்கிறது. இவ்வாறு இருக்கையில் இந்த விநியோக சங்கிலியிலிருந்து வெளியேறுவது என்பது ஆப்பிள் நிறுவனத்திற்கு கடினமானது என புளும்பெர்க் தெரிவித்திருக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் சீனா 23 கோடி ஐபோன்களை தயாரித்துள்ளது. ஆனால் இந்தியா வெறும் 30 லட்சம் அளவில்தான் உற்பத்தி செய்திருக்கிறது. எது எப்படியாயினும், இனியும் சீனாவை நம்பி இருக்காமல் மாற்று உற்பத்தி நாடுகளை ஆப்பிள் தேட தொடங்கியுள்ளது.
இந்தியா
அதன் விளைவுதான் இந்தியாவில் ஏர்பாட் உற்பத்தி செய்ய இருக்கும் திட்டம். சர்வதேச அளவில் பல உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் மலிவு விலையில் உற்பத்தி சக்தி கிடைக்கும். மட்டுமல்லாது, இந்தியாவுக்கு உள்ளேயே பெரிய சந்தை இருக்கிறது. கொரோனா தொற்று காலத்தில் இதர நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இந்தியா மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. இவையெல்லாமும்தான் ஆப்பிள் இந்தியாவில் தனது உற்பத்தியை தொடங்க காரணம் என்று சொல்லப்படுகிறது.